Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
ஈரோடு: சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவில் இணைவார்களா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பதில் அளித்துள்ளார். அனைவரும் விரைவில் அதிமுகவில் ஒன்றிணைவோம் என்று கூறிய கே.சி.கருப்பணன், அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் வேதனையோடு இருப்பதாக கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு பின் அதிமுகவில் இருந்து சாரை சாரையாக நிர்வாகிகள் பலரும் தவெக பக்கம் சென்றுவிட்டனர். முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வளர்மதி, வெல்லமண்டி நடராஜன், இசக்கி சுப்பையா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியமாகிவிட்டனர். அதேபோல் மாவட்ட அளவிலும் ஏராளமான நிர்வாகிகள் விஜய் பக்கம் தாவி வருகின்றனர்.

நாளுக்கு நாள் அதிமுக கரைந்து வரும் சூழலில், எஸ்பி வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகளும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தரப்பில், டிடிவி தினகரனை அதிமுகவுக்குள் கொண்டு வர வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தெரிய வந்தது. டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதே எஸ்பி வேலுமணியின் குரலாகவும் இருந்தது.
இதனால் அதிமுகவுக்குள் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா இருவரும் சேர்க்கப்படுவார்களா என்ற கேள்வி அக்கட்சி தொண்டர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி கருப்பணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுகவ்ல் இருக்கும் அனைவரும் ஒன்றிணைவோம். யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்து கொள்வோம். இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து பாருங்கள்.
அதிமுகவில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை இணைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அதிமுக வழக்கு போட்டுள்ளது. அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்ற சில நாட்களில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக பக்கம் செல்ல வேறு என்ன காரணம் இருக்க முடியும். பதவியை ராஜினாமா செய்து சில ஆண்டுகள் அமைதியாக இருந்திருந்தால் கூட பரவாயில்லை.
அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் வேதனையோடு இருக்கிறார்கள். அவர்களே மீண்டும் அதிமுகவில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்துள்ளார். சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவருமே தனித்தனி கட்சியை நடத்தி வரும் சூழலில், அவர்கள் அதிமுகவுடன் கட்சியை இணைப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.