டிரம்பால் கூட காப்பாற்ற முடியவில்லை.. பாக்., – துருக்கி ஒப்பந்தத்தால் சவுதிக்கு, ஈரான் தந்த வார்னிங் | Mecca Joint Defence Agreement: Iran warns Saudi Arabia, Pakistan, Turkey

Spread the love

International

oi-Nantha Kumar R

டெஹ்ரான்: பாகிஸ்தான் – துருக்கி நாடுகளுடன் சவுதி அரேபியா பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் சவுதி அரேபியாவை யாராவது தாக்கினால் பாகிஸ்தான், துருக்கி களமிறங்கும் என்பது தான் இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்நிலையில் தான் சவுதி அரேபியாவின் எதிரியாக உள்ள ஈரான் அந்த நாட்டிற்கு வார்னிங் கொடுத்துள்ளது.

சவுதி அரேபியாவிற்கும், ஈரானுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. சவுதி அரேபியா, அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. சவுதி அரேபியாவில் அமெரிக்காவிற்கு சொந்தமான விமானப்படை தளம் உள்ளது. அதேவேளையில் ஈரானுடன், சவுதி அரேபியாவிற்கு இடையே மோதல் போக்கு உள்ளது.

mecca-joint-defence-agreement-iran-warns-saudi-arabia-pakistan-turkey

இதனால் அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தும்போது.. ஈரான், சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்காவின் விமான தளம் உள்பட பிற இடங்களை குறிவைத்து தாக்கும். அதுமட்டுமின்றி சவுதி அரேபியா சன்னி இஸ்லாமிய நாடு. ஆனால் ஈரான் ஷியா இஸ்லாமியர் நாடு. இதுவும் இருநாடுகள் இடையேயான மோதலுக்கு முக்கிய காரணமாகும்.

சமீபத்திய அமெரிக்கா தாக்குதலின்போது கூட பதிலடி நடவடிக்கை ஈரான், சவுதி அரேபியாவை தாக்கி இருந்தது. இதனால் சவுதி அரேபியா தனது நாட்டின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் – துருக்கி உடன் புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் நேற்று ‘மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்’ (Mecca Joint Defence Agreement) என்ற உடன்படுக்கை 3 நாடுகள் இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் துருக்கி அதிபர் தையிப் எர்டோகன், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் இடையே கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம் என்னவென்றால் பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா உள்ளிட்ட 3 நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் அது தங்களின் மீதே நடத்தப்பட்ட தாக்குதலாக கருதப்படும். இந்த நாடுகளுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும் 3 நாடுகளின் படைகள் இணைந்து செயல்படும் என்பது தான் முக்கிய மேட்டர். அதுமட்டுமின்றி இது ‘சன்னி நேட்டோ’ அமைப்புக்கான முன்னோட்டம் என்று கூறப்படுகிறது. அதாவது ஷியா இஸ்லாமிய நாடான ஈரானுக்கு எதிராக சன்னி இஸ்லாமிய நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இது ஈரானை கோபப்படுத்தி உள்ளது.

இதனால் இந்த ஒப்பந்தத்ம் பற்றி ஈரான் விமர்சனம் செய்துள்ளது. இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து ஈரான் நாட்டின் எம்பியும், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை ஆணையத்தின் உறுப்பினரான இப்ராஹிம் ரெசாய் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி இப்ராஹிம் ரெசாய் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”அமெரிக்கர்களை பல ஆண்டுகளாக சவுதி அரேபியா சார்ந்து இருந்தது. இந்த சார்பு நிலை சவுதி அரேபியாவிற்கு பாதுகாப்பை தரவில்லை. அதுபோல் தான் துருக்கி மற்றும் பாகிஸ்தானுடனான இந்த பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தமும் அவர்களுக்கு பாதுகாப்பை தராது என்பதை சவுதி அரேபியர்கள் உணர வேண்டும். இத்தகைய ஒப்பந்தத்திற்கு பதில் சவுதி அரேபியா தனது கொள்கைகளை சீரமைத்து கொண்டாலே போதும்.அந்த நாட்டின் பாதுகாப்பிற்காக மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய அவசியம் இருக்காது” என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா – ஈரான் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இதனால் அமெரிக்காவின் நட்பு நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது. அந்த வகையில் சவுதி அரேபியா மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் மூலம் இனி சவுதி அரேபியாவை, ஈரான் தாக்கினால் அந்த நாட்டிற்கு ஆதரவாக பாகிஸ்தான், துருக்கி நாடுகள் உதவி செய்யும். இதனால் இந்த ஒப்பந்தம் ஈரானுக்கு எதிரானதாக பார்க்கப்படும் நிலையில் அந்த நாட்டின் வெளியுறவு கொள்கை ஆணையத்தின் உறுப்பினர் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்து சவுதி அரேபியாவிற்கு வார்னிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *