International
oi-Vigneshkumar
பெய்ஜிங்: அமெரிக்கா சீனா இடையே கடந்த சில காலமாகவே மோதல் இருப்பது அனைவருக்கும் தெரியும். சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த அமெரிக்கா பல்வேறு வழிகளிலும் முயன்று வருகிறது. இதற்கிடையே டிரம்பிற்கு அதிர்ச்சி தரும் வகையில், அமெரிக்க வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை சீனா உருவாக்கியுள்ளது.
இப்போது உலகின் இரு முக்கிய வல்லரசு நாடுகளாக அமெரிக்காவும் சீனாவும் இருக்கிறது. பல்வேறு துறைகளிலும் இந்த இரு நாடுகளுக்குமே கடும் போட்டி இருக்கிறது. குறிப்பாக ராணுவத்திலும் கூட அமெரிக்கா, சீனா இடையே போட்டி இருக்கிறது. அமெரிக்காவுக்கு இணையான ஆயுதங்களை உருவாக்குவதில் சீனா தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.

புதிய ஏவுகணை
இதற்கிடையே சீனா ஆயுத திறனை மேலும் விரிவுபடுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கான கிமீ தொலைவில் உள்ள முக்கிய இலக்குகளை குறிவைத்து தாக்கக்கூடிய ஹைப்பர்சோனிக் கிளைட் ஏவுகணையை சீனா இப்போது வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வானில் இருந்து ஏவப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹைப்பர்சோனிக் கிளைட் ஏவுகணைகள், வானில் நகர்ந்து கொண்டு இருக்கும் இலக்குகளை கூட துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடியது.
ஏன் முக்கியம்
அமெரிக்கா ஈரான் இடையே கடந்த 6 மாதங்களாக போர் தொடரும் நிலையில், வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் நீண்டதூர தாக்குதல் ஆயுதங்களுக்கு சர்வதேச அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் சீனா உருவாக்கியுள்ள இந்த புதிய ஆயுதங்கள் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. சீனாவின் புதிய ஆயுதங்கள், தொலைதூரத்தில் உள்ள முக்கியமான விமானங்களை குறிவைத்து தாக்கி அழிக்கக்கூடியது. குறிப்பாக வானில் இருந்தபடியே எரிபொருள் நிரப்பும் டேங்கர்கள், எச்சரிக்கை விமானங்கள் மற்றும் அமெரிக்க விமானப்படையின் E-4B நைட் வாட்ச் போன்ற விமானங்களையும் கூட துல்லியமாக தாக்கும்.
வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க.. வானில் இருந்து ஏவப்படும் ஏவுகணையை உருவாக்கிய முதல் நாடு சீனா என்றும் கூறப்படுகிறது. சீனா உருவாக்கியுள்ள இந்த Hypersonic Glide Vehicle என்பது ஏவுகணை வளிமண்டலத்தில் ஹைப்பர்சோனிக் வேகத்தில் பயணித்து இலக்கை நோக்கி செல்லும்! அதாவது ஒளியை விட 5 மடங்கு வேகத்தில் 6,100 கிமீ வேகத்தில் பயணிக்கக்கூடியது
அமெரிக்கா வரை செல்லும்
மேலும், இது ஏவப்பட்ட பிறகும் தனது பாதையை மாற்றி கொள்ள கூடியது. இதனால் எதிரிகளால் இதை எளிதாக இடைமறித்துவிட முடியாது. இந்த ஏவுகணை அதிகபட்சமாக 2,414 கி.மீ வரை சென்று தாக்கக்கூடும். இது கிட்டத்தட்ட மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள முக்கிய அமெரிக்க ராணுவ தளமான குவாம் வரை சென்று தாக்கக்கூடும். மேம்பட்ட DF-27 ஏவுகணை அதிகபட்சம் 8,000 கி.மீ வரை செல்லும். அதாவது அமெரிக்காவின் ஹவாய் தீவையே கூட நேரடியாக தாக்க முடியும்!
இந்த ஏவுகணையை பயன்படுத்துவதில் சில சிக்கல்களும் உள்ளன. அதிகபட்ச தூரத்தில் செல்லும்போது, இலக்கை அடைய 20 நிமிடங்கள் அல்லது அதற்கும் அதிகமாக ஆகலாம். இதனால் துல்லியமான இலக்கை தாக்க புதிய தகவல்கள் தேவைப்படும். அதேநேரம் இது சீன ஆயுதத்திற்கு மட்டும் இருக்கும் சிக்கல் இல்லை. தொலைதூரம் வரை செல்லும் அனைத்து ஏவுகணைகளுக்குமே இந்த சிக்கல் இருக்கிறது.
அதிகரிக்கும் சீனாவின் ஆயுத திறன்
அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் சீனா தனது ஏவுகணை திறனை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, சீனாவிடம் குறைந்தது 3,150 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 300 தரையிலிருந்து ஏவப்படும் க்ரூஸ் ஏவுகணைகள் உள்ளன. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் 147% வரையிலும் க்ரூஸ் ஏவுகணைகள் கையிருப்பு 50 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.

