தற்போது வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, காரின் ரேடார் சென்சார்களுக்குப் பயன்படும் 77GHz-81GHz அலைவரிசைக்கும், வாகனங்கள் மற்றும் சாலை உள்கட்டமைப்புகளுக்கு இடையே அவசரத் தகவல்களைப் பரிமாறும் V2X (Vehicle-to-everything) தொழில்நுட்பத்திற்கான 5.9GHz அலைவரிசைக்கும் இனி தனியாக லைசென்ஸ் பெறத் தேவையில்லை. இந்த புதிய நடைமுறை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சர்வதேச விதிகளுக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு என்ன பயன்?
கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் பதிவாகி, அதில் 1.77 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அரசுத் தரப்பு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

லைசென்ஸ் கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் விற்கப்படும் அதே அதிநவீன பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட கார்களை போஷ் (Bosch), கான்டினென்டல் (Continental) போன்ற நிறுவனங்கள் இந்தியாவிலும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும். இதன் மூலம் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz), பிஎம்டபிள்யூ (BMW) போன்ற பிரீமியம் கார்களில் மட்டுமே இருந்த உயர்தர பாதுகாப்பு வசதிகள், இனி மாருதி சுசுகி, டாடா, மஹிந்திரா போன்ற நிறுவனங்களின் நடுத்தர விலை கார்களிலும் சாமானிய மக்களுக்குக் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.