இது குறித்து உள்விவரம் அறிந்த போலீஸ் தரப்பில் பேசினோம், “நிருபாமலரிடம் செயினை பறித்து விட்டு டூவீலரில் தப்பிச் சென்ற குற்றவாளிகள் சென்ற சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். டூவீலரிலேயே திருச்சி, கரூர், திருப்பூர் வரை சென்றிருந்தனர். அதை வைத்து இருவரையும் நோட்டமிட்டு வந்தோம். திருப்பூரில் மட்டும் மூன்று வீடுகள் வாடகைக்கு எடுத்து மாறி மாறி தங்கி வந்துள்ளனர். மூன்று வீடுகளையும் கண்காணித்தோம். செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் இவர்கள் தான் என்பதை உறுதி செய்ததும் அந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினோம்.
இதில் மதுரையைச் சேர்ந்த, போலீஸாரால் கண்காணிக்க கூடிய சரித்திர பதிவேடு குற்றவாளிகளான தனபாண்டி, சதீஷ் ஆகிய இருவரும் தான் இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களும் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். தனபாண்டி, சதீஷ் இருவரும் நெருக்கமான நண்பர்கள். எப்போதும் ஒன்றாக இருப்பார்கள். ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு உள்ளே சென்று நகை, பணத்தை கொள்ளையடிப்பது, சாலையில் தனியாக செல்லும் பெண்களிடம் தங்க செயினை பறிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.