India
-Vigneshkumar
லக்னோ: ராமரின் பிறந்த இடமாகக் கருதப்படும் அயோத்தியில் ராமர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் கோயிலுக்கு மிகப் பெரியளவில் காணிக்கை கொடுத்து வருகிறார்கள். இருப்பினும், அந்த காணிக்கையில் பெரியளவில் முறைகேடு நடந்ததாகப் பூகம்பமே இப்போது வெடித்துள்ளது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் போடும் நன்கொடைகளில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பெரிதாக வெடித்துள்ளன. இது தொடர்பாகச் சிறப்பு விசாரணைக்குழு நடத்திய விசாரணையில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் அம்பலமாகியுள்ளன. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிர்வாக குறைபாடுகள்
காணிக்கை பணம் எப்படித் திருடப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். எஸ்.ஐ.டி-யின் முதற்கட்ட அறிக்கை கோயிலின் நிர்வாக குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. காணிக்கை எண்ணும் போது பாதுகாப்பு காவலர் முன்னிலையில் இருக்க வேண்டும், அறைக்குள் நுழைபவர்களைச் சோதனையிட வேண்டும், மற்றும் சிசிடிவி காட்சிகளை 180 நாட்களுக்குப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் போன்ற அடிப்படை விதிகள் எதுவுமே இங்குப் பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராயின் முன்னாள் ஓட்டுநர் டின்னு யாதவ், விதிகளுக்குப் புறம்பாகப் பல உண்டியல்களின் சாவிகளைத் தன் வசம் வைத்திருந்தார். டின்னு யாதவிடம் சாவிகள் இருந்த உண்டியல்களில் இருந்தே பணம் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடுகளைப் பயன்படுத்தியே மோசடிகள் நடந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
விதிகளை மதிக்கல
காணிக்கை பணத்தில் முறைகேடுகள் நடப்பதாக அறக்கட்டளை அதிகாரிகள் சந்தேகமடைந்ததைத் தொடர்ந்து, 2025இல் அறக்கட்டளை மற்றும் எஸ்பிஐ அதிகாரிகள் கூட்டத்தில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இறுதி செய்யப்பட்டன. அதன்படி ஊழியர்கள் பாக்கெட்டுகள் இல்லாத ஆடைகளை அணிய வேண்டும், சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்க வேண்டும், முறையான சோதனைகளை நடத்த வேண்டும் போன்ற விதிகள் வகுக்கப்பட்டன. ஆனால், இந்த விதிமுறைகள் எதுவுமே பின்பற்றப்படவில்லை.
காணிக்கை எண்ணும் அறையின் சிசிடிவி காட்சிகள் 180 நாட்களுக்குப் பதிலாக வெறும் 45 நாட்களுக்கு மட்டுமே சேமிக்கப்பட்டிருந்தன. மேலும், கைது செய்யப்பட்டுள்ள காணிக்கை எண்ணும் பிரிவின் பொறுப்பாளர் சுபாஷ் ஸ்ரீவஸ்தவா, அறக்கட்டளையின் முக்கிய அதிகாரி ஒருவரின் பரிந்துரையின் பேரிலேயே அந்த பணியில் அமர்த்தப்பட்டார் என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அறிக்கை
கடந்த ஜூன் 7ம் தேதியே சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காணிக்கை முறைகேடு குறித்துக் குற்றம் சாட்டினார். அயோத்தி விவகாரத்தை முதலில் எழுப்பியவர்களில் அகிலேஷ் யாதவ் முதன்மையானவர். இருப்பினும், அதை வழக்கம்போல அறக்கட்டளை மறுத்தது. இருப்பினும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில் ஜூன் 13ம் தேதி அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, பல அதிர்ச்சி தகவல்களைக் கண்டறிந்தது. இதையடுத்து ஜூன் 23ம் தேதி தனது முதற்கட்ட அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.
கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி நடைபெற்ற கோயில் பிரதிஷ்டைக்குப் பிறகு, குறிப்பாக பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவின் போது, அயோத்தி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது. இதனால் கோயில் உண்டியல்களில் ரொக்கப் பணமும், நகை உள்ளிட்ட பொருட்களும் அதிகமாக காணிக்கையாக வந்தன. அந்த நேரத்திலேயே பணத்தை இவர்கள் திருடியுள்ளனர்.
கழிவறையில் பணம்
இந்த மோசடி அம்பலமானதைத் தொடர்ந்து எஸ்.ஐ.டி அறிக்கையின்படி ஜூன் 25ம் தேதி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு அவிநாஷ் சுக்லா, அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா, மனிஷ் குமார் யாதவ், கருணேஷ் பாண்டே, ரமாசங்கர் மிஸ்ரா, சுபாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் டின்னு யாதவ் ஆகிய எட்டுப் பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து இதுவரை சுமார் 80 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும், வெளிநாட்டு நாணயங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, காணிக்கை எண்ணும் அறைக்கு அருகிலுள்ள கழிவறையிலிருந்து 2.5 லட்சம் ரூபாய் கண்டெடுக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

