முதுகுளத்தூர் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு; 5,000 ஆண்டுகள் பழமையானதால் ஆய்வு நடத்த கோரிக்கை

Spread the love

முதுகுளத்தூர் வட்டம், வலசை, மணக்குளம் ஆகிய ஊர்களுக்கு இடையில் உள்ள அய்யனார், தர்ம முனீஸ்வரர் கோயில் வளாகத்தில் சுற்றுச்சுவர் எடுக்க குழி தோண்டியுள்ளனர். அப்போது முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன.

இதுபற்றி பெருங்கருணையைச் சேர்ந்த மாரி, வேல்முருகன் ஆகியோர் கொடுத்த தகவலின்பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அங்கு நேரில் ஆய்வு செய்தார்.

முதுமக்கள் தாழியை ஆய்வு செய்த ராஜகுரு
முதுமக்கள் தாழியை ஆய்வு செய்த ராஜகுரு

அங்கு கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் குறித்து ராஜகுரு கூறுகையில், ”கோயில் அருகில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் தாழிகள் புதைந்துள்ளன. அங்கு கோயிலுக்கான சுற்றுச்சுவர் எடுக்க வானம் தோண்டியபோது ஒரு தாழி வெளிப்பட்டுள்ளது. அந்தத் தாழிக்குள் 3 குவளைகள், தட்டு, கிண்ணம், கும்பா, சிறிய பானை ஆகியவை இருந்துள்ளன.

இவை கறுப்பு சிவப்பு, சிவப்பு நிறமுடையன. 2018-ல் கோயிலின் தெற்கில் குளம் தோண்டியபோது அங்கும் முதுமக்கள் தாழிகள் வெளிவந்துள்ளன. அங்கு ஆய்வு செய்தபோது உடைந்த சுடுமண் தாங்கிகள், மூடிகளில் குறியீடுகள் இருந்தன.

பெருக்கல் குறி, தலைகீழ் சூலம், ஏணி ஆகிய குறியீடுகள் மூன்று சிவப்பு நிற ஓடுகளிலும், ஏழு கறுப்பு சிவப்பு ஓடுகளிலும் உள்ளன.

இறந்தவர்களுக்குப் பெரிய கற்களை நட்டுவைத்து அடையாளப்படுத்தியதால் பெருங்கற்காலம் எனவும், இரும்பு கண்டுபிடிக்கப்பட்டதால் இரும்புக்காலம் எனவும் அழைக்கப்படும் இது கி.மு.4000 முதல் கி.மு.1500 வரையிலானது. 

தாழிகள் சிவப்பு நிறமுடையதாக இருந்ததையும் அது புதைக்கப்பட்ட காட்டை தாழிப் பெருங்காடு எனவும் புறநானூறு குறிப்பிடுகிறது.

பழமையான ஓடுகள் உள்ளிட்ட பொருட்கள்
பழமையான ஓடுகள் உள்ளிட்ட பொருட்கள்

இக்காலத்தின் ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடலை ஊருக்கு வெளியே உள்ள காடுகளில் போட்டுவிடுவர். அதை நரி, கழுகு போன்றவை இரையாய் கொண்டபின் கிடக்கும் எலும்புகளைச் சேகரித்து, அவற்றுடன் அவர்கள் பயன்படுத்திய அல்லது படையல் பொருட்களை சிறிய முதுமக்கள் தாழியில் வைத்து மூடி அடக்கம் செய்துள்ளனர். 

மட்கலங்கள், இரும்பு பொருட்கள், கல்மணிகள் போன்றவை படையல் பொருள்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அக்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய உதவுகின்றன. பிற்காலத்தில் பெரிய தாழிக்குள் உடலை வைத்து அடக்கம் செய்யும் முறை இருந்துள்ளது.

தாழிக்குள் இருந்த கறுப்பு சிவப்பு மட்கலங்கள் பெருங்கற்காலத்தில் பயன்பாட்டில் இருந்தவை. ஒரே மட்கலத்தின் உள்ளேயும் கழுத்துப் பகுதியிலும் கறுப்பாகவும் பிற பகுதிகளில் சிவப்பாகவும் உள்ளதை கறுப்பு சிவப்பு மட்கலங்கள் என்பர்.

குவளை, தட்டு  கிண்ணம், கும்பா உள்ளிட்ட பொருள்கள்
குவளை, தட்டு கிண்ணம், கும்பா உள்ளிட்ட பொருள்கள்

இங்கு கிடைத்தவை அடர் வண்ணத்துடனும், வழுவழுப்பாகவும், பளபளப்பாகவும் உள்ளன. இவற்றைச் சுடும்போது அதன் மேல் உப்பு தூவி பளபளப்பாக ஆக்கியுள்ளனர். மலைப் பகுதிகளில் காணப்படும் பெருங்கற்படைச் சின்னங்களை விட சமவெளிப் பகுதிகளில் உள்ள சிறிய தாழிகள் காலத்தால் முந்தியவை என்பதால் இவை சுமார் 5000 ஆண்டுகள் பழமையானவை எனலாம்.

இங்கிருந்து வடக்காக 500 மீ தொலைவில் விக்கிரமபாண்டியபுரம் ராஜா கோயில் திடல் பகுதியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பானை ஓடுகள் சிதறிக்கிடக்கின்றன. இது மக்கள் குடியிருந்த பகுதியாகவும், தாழிகள் உள்ள வலசை, மணக்குளம் இடுகாடாகவும் பெருங்கற்காலத்தில் இருந்துள்ளதை அறியலாம்.

தொல்லியல் துறை இப்பகுதியில் அகழாய்வு செய்தால் மேலும் பல வரலாற்றுச் செய்திகள் வெளிவரும்” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *