India
oi-Nantha Kumar R
டெல்லி: எனக்கு டெல்லி வேண்டாம். நான் எனது சொந்த மாநிலமான உத்தரகாண்ட்டிலேயே வசிக்க விரும்புகிறேன். 3 ஆண்டுகளாக சொந்தமாக நிலம் வாங்க முயன்றும் தேவையான நிலம் கிடைக்கவில்லை. இதனால் நிலம் வாங்கி தர உதவி செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அம்மாநில பாஜக முதல்வர் புஷ்கர்சிங் தாமியிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பவர் ரிஷப் பண்ட். உத்தரகாண்ட்டை சேர்ந்த ரிஷப் பண்ட் டெல்லியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தான் நேற்று நள்ளிரவில் ரிஷப் பண்ட் திடீரென்று தனது எக்ஸ் பக்கத்தின் வழியாக உத்தரகாண்ட் பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் உதவி கேட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று நள்ளிரவு 12.46 மணிக்கு ரிஷப் பண்ட் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
”வணக்கம் புஷ்கர் சிங் தாமி. நலமாக இருக்கிறீர்களா? உத்தரகாண்ட்டை சேர்ந்த நான் டெல்லியில் இருக்கிறேன். டெல்லியில் இருந்து உத்தரகாண்ட்டிற்கு திரும்ப விரும்புகிறேன். உத்தரகாண்ட்டில் வசிப்பதற்காக நிலம் வாங்க முயற்சிக்கிறேன். ஆனால் நான் வசிப்பதற்கு ஏற்ப உரிய இடத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
எனக்கு என் உத்தரகண்ட் மாநிலம் என்றால் மிகவும் பிடிக்கும். நிலம் வாங்குவதில் எனக்கு உதவுமாறு கேட்டு கொள்கிறேன். ஏனெனில் தற்போது சூழலில் முறையான ஆவணங்களுடன் நிலம் வாங்குவது ஒரு பெரும் சவாலாக உள்ளது. நான் உத்தரகாண்ட் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தியபோது எனக்கு வழங்கப்பட இருந்த நிலம் இன்னும் கிடைக்கவில்லை.
என் சொந்த ஊருக்கு திரும்பி உத்தரகாண்டின் வளர்ச்சிக்கு உதவவும், என் ‘பஹாடி’ (மலைப்பகுதி) மக்களுடன் வசிக்கவும் விரும்புகிறேன். தயவு செய்து இதற்கு உதவுங்கள். கடந்த 3 ஆண்டுகளாகியும் எனக்கு நிலம் கிடைக்கவில்லை, உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
இதன்மூலம் டெல்லி இனி எனக்கு வேண்டாம். நான் சொந்த மாநிலமான உத்தரகாண்ட்டிலேயே இருக்க விரும்புகிறேன். அங்கு நிலம் வாங்க தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார். இதற்கு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி காலையில் பதிலளித்தார்.
அதில், ”அன்பான ரிஷப்.. நீங்கள் உத்தரகாண்ட்டின் பெருமை. உங்களின் சிறப்பான செயல்பாடு, விளையாட்டு துறையில் மேற்கொண்ட சாதனை உள்ளிட்டவற்றில் உத்தரகாண்ட்டின் பெயரை ஒளிர செய்துள்ளீர்கள். இப்போது இங்கு திரும்பி வந்து மாநிலத்துக்காக பங்களிக்க வேண்டும் என்று உங்களின் எண்ணம் பாராட்டத்தக்கது.
நீங்கள் சொன்ன விஷயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அவர்கள் விரைவில் உங்களை தொடர்பு கொண்டு விதிகளுக்கு உட்பட்டு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவார்கள்” என்று கூறியுள்ளார்.