International
oi-Nantha Kumar R
பிரேசில்லா: பிரேசில் நாட்டில் ‘பங்கி ஜம்ப்’ மூலமாக 130 அடி உயரத்தில் இருந்து 21 வயது இளம்பெண்ணை ஊழியர்கள் கீழே தள்ளிவிட்டனர். அப்போது அவரது உடலில் பாதுகாப்புக்கான கயிறு கட்ட ஊழியர்கள் மறந்தனர். இதனால் அந்த பெண் சாகசம் செய்ய சென்று பரிதாபமாக கீழே விழுந்து பலியான துயர சம்பவம் நடந்துள்ளது.
‘பங்கி ஜம்ப்’.. வாழ்க்கையில் ஒருமுறையாவது முயற்சி செய்து விட வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் இன்னும் சிலரோ உயரத்தில் இருந்து உடலில் கயிறு கட்டி குதிப்பதை பார்த்து அம்மாடியோவ்.. எப்படியா இப்படி தைரியமாக குதிக்கிறாங்க என்று வீடியோ பார்த்து வியப்பாக கூறுவது உண்டு.

இந்நிலையில் தான் கணவருடன் சேர்ந்து ‘பங்கி ஜம்ப்’ மூலமாக கயிறு கட்டி 130 அடி உயரத்தில் இருந்து கீழே குதிக்க முயன்ற பெண் ஒருவர் ஊழியர்களின் அல்ட்சியத்தால் இறந்துள்ளார். இந்த துயர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
பிரேசிலின் சாவோ பாலோ மாகாணத்தில் உள்ள ‘ஸ்கெலட்டன் பாலத்தில்’ பங்கி ஜம்ப் உள்ளது. மரியா எடுவார்டா ரோட்ரிக்ஸ் டி ப்ரீடாஸ் (வயது 21) என்ற இளம்பெண் தனது காதலனுடன் அங்கு சென்றார். மரியா ‘பங்கி ஜம்ப்’ விளையாட ஆர்வமானார். அது 130 அடி உயரத்தில் இருந்து ‘பங்கி ஜம்ப்’ ஆகும். 130 அடி உயரத்தில் உடலில் கயிறு கட்டி ஒவ்வொருவரும் கீழே குதிப்பார்கள்.
அந்த வகையில் மரியாவும் கீழே குதிக்க தயாரானார். ஆனால் ‘பங்கி ஜம்ப்’ ஊழியர்கள் அவரது உடலில் பாதுகாப்பு கயிறு(Safety Rope) கட்டவில்லை. அவரது உடலில் பாதுகாப்பு கயிறு கட்டாமலேயே ஊழியர்கள் அவரை 130 அடி உயரத்தில் இருந்து கீழே தள்ளினர். இதில் கீழே விழுந்த மரியா தலையில் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக 6 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் மரியா 130 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலியாகும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் மரியா கீழே விழத் தொடங்கியதும், அங்கிருந்தவர்கள் “கயிறு எங்கே?” என்று அலறிய சத்தம் பதிவாகி உள்ளது. அதேபோல் இறப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பு, மரியா தனது சமூக வலைதள பக்கத்தில் தனது கையில் கட்டப்பட்டிருந்த ஜம்பிங் பேண்டுகளை புகைப்படம் எடுத்து பதிவிட்டிருந்தார்.
அதில், ‘பங்கி ஜம்ப்’ பாலத்தில் இருந்து குதிக்க என்னை அனுமதித்த அந்த பைத்தியக்காரர் யார்?” என்று விளையாட்டாக கேள்வி எழுப்பி இருந்தார். இந்த பதிவு இப்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவம் மரியாவின் வருங்கால கணவரின் கண்முன்னே நடந்துள்ளது. இதனால் அவர் கதறி அழுத நிலையில் அதிர்ச்சியில் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.