Business
oi-Vigneshkumar
சென்னை: இந்தியர்களின் செலவழிக்கும் பழக்கத்தில் மிக பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் 2025ஆம் ஆண்டில் இந்தியர்கள் நகைகளை விட மதுபானங்களுக்கே அதிக பணம் செலவிட்டதாகவும் துறை சார்ந்த வல்லுநர் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக வடஇந்தியாவை காட்டிலும் தென்னிந்தியர்களே மது குடிக்க அதிக பணத்தை செலவிடுவதாகவும் அவர் பகீர் கருத்தை கூறியிருக்கிறார்.
இந்தியாவில் தங்கம் மற்றும் நகைகள் எப்போதுமே பாரம்பரிய முதலீடாகவும், திருமணம் மற்றும் விழாக்களின் முக்கிய அங்கமாகவும் கருதப்படுகின்றன. ஏழை மக்களாக இருந்தாலும் சரி, பணக்காரர்களாக இருந்தாலும் சரி பலருக்கும் தங்கமே பிரதான முதலீடாக இருக்கும். சிறுக சிறுக பணத்தை சேர்த்து தங்கத்தை வாங்க வேண்டும் என்பதே மக்களின் ஆசையாக இருக்கும்.

மதுபானம்
இந்நிலையில் தங்க சந்தையை விட மதுபான சந்தையின் மதிப்பு அதிகரித்திருப்பதாக யூனிஃபி கேபிடல் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜி. மாறன் தெரிவித்துள்ளார். அதாவது மக்கள் தங்க முதலீட்டிற்கு செலவிடுவதை காட்டிலும் மதுபானம் வாங்க அதிக பணத்தை செலவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதிலும் தென்னிந்தியாவிலேயே மதுபான சந்தை பெரிதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
சமீபத்தில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “2025ல் நகைகளை விட மதுபானங்களுக்கே அதிக பணத்தை இந்தியர்கள் செலவிட்டனர். இந்திய நகை சந்தையின் மதிப்பு சுமார் 60 பில்லியன் டாலர். ஆனால் மதுபான துறையின் சந்தை மதிப்பு அதைவிட அதிகமாக இருந்தது. அதிலும் தென்னிந்தியாவில் தான் மதுவுக்கான செலவு அதிகமாக இருக்கிறது.
தென்னிந்தியா
இந்திய மக்கள் தொகையில் தென்னிந்திய மாநிலங்களின் பங்கு வெறும் 18 சதவீதம் மட்டுமே என்றாலும் நாட்டின் மொத்த மதுபான விற்பனை மதிப்பில் சுமார் 50 சதவீதம் தென்னிந்தியாவில் தான் நடக்கிறது. எனவே, வேல்யூ அடிப்படையில் பார்த்தால், தென்னிந்தியாவின் மதுபான சந்தை என்பது வட, மேற்கு மற்றும் கிழக்கு இந்தியா ஆகிய மூன்று பகுதிகளின் மொத்த மார்கெட்டிற்கு இணையாக உள்ளது” என்றார்.
பொருளாதார வல்லுநர்கள்
இந்தியர்களின் வாழ்க்கை முறை மற்றும் செலவழிக்கும் பேட்டர்ன்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையே இது வெளிப்படுத்துவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். முன்பு தங்கம் மற்றும் நகைகளில் முதலீடு செய்வது பாதுகாப்பான சேமிப்பாக பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது வாழ்வது ஒரு முறை என்பதால் பொழுதுபோக்கு, எக்ஸ்பீரியன்ஸ் ஆகியவற்றில் அதிகம் செலவழிக்க வேண்டும் என்ற சிந்தனை இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
மது விற்பனை தென்னிந்திய மாநிலங்களில் அதிகம் இருக்கும் சூழலில், அவை மாநில அரசுகளின் கலால் வருவாயில் மிக பெரிய பங்காற்றி வருவதாகவும் மாறன் சுட்டிக்காட்டினார். நகரமயமாக்கல், அதிகரித்து வரும் வருமானம் மற்றும் சமூக மாற்றங்கள் ஆகியவையே இதற்கு பிரதான காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு
இது தவிர தமிழ்நாடு குறித்து பேசிய அவர், தமிழ்நாடு கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் மருத்துவச் சுற்றுலாவின் முக்கிய மையமாக உருவெடுத்துள்ளதாக மாறன் தெரிவித்தார். தரமான மருத்துவ சேவைகளை பெற வெளிமாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்து இருந்தும் கூட அதிகளவில் சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டுக்கு வருவதால், மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கும் இது முக்கிய காரணமாக இருப்பதாக அவர் கூறினார்.