“தங்கம் இப்போது வாங்க வேண்டாம்..” மிக தெளிவாக ஆனந்த் சீனிவாசன் சொன்ன பாயிண்ட்! இப்படி சொல்லிட்டாரு | Gold rate might fall in couple of months, so better to hold new purchase plans says Anand Srinivsan

Spread the love

Business

oi-Vigneshkumar

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இதற்கான காரணத்தை பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். மேலும், தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும்.. இப்போது தங்கத்தை வாங்கலாமா.. அல்லது கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டுமா என்பது தொடர்பாகவும் அவர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த தங்கம் விலை, திடீரென இப்போது யூடர்ன் போட்டு ஏற ஆரம்பித்துள்ளது. கடந்த வாரம் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.650 உயர்ந்துள்ளது. இப்படி தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர ஆரம்பித்துள்ள நிலையில், இப்போது அதை வாங்கலாமா அல்லது கொஞ்ச காலம் காத்திருந்தால் மீண்டும் குறையுமா என்பதே இப்போது பொதுமக்களிடையே உள்ள கேள்வியாக இருக்கிறது.

Anand Srinivsan personal finance gold

ஆனந்த் சீனிவாசன்

இதற்கிடையே தங்கம் கண்டிப்பாக இப்போது வேண்டும் என்றால் மட்டும் இப்போது வாங்குங்கள் என கூறியுள்ளார் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன். இல்லையென்றால் சில காலம் காத்திருப்பது சரியாக இருக்கும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் சேனலில் கூறுகையில், “தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறி வருகிறது. ஏற்கனவே இறக்குமதி வரி உயர்வால் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1000 கூடுதலாக தான் இருந்தது. அத்தோடு சேர்த்து இப்போது மேலும் விலையேறி வருகிறது. 24 கேரட் தங்கம் ரூ.15,000 தொட்டுவிட்டது. வெள்ளி விலையும் ஏறிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால், எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை.

உலக நாடுகள்

ஈரானும் ஓமானும் இணைந்து ஹார்முஸ் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அங்கே தனியாக ரூட் போட்டுள்ளதாக தெரிகிறது. அதை பயன்படுத்தும் நாடுகள் பெருந்தொகையைக் கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும். அந்த கட்டணத்தில் பாதி ஈரானுக்கும் மீதி ஓமானுக்கும் போகும். சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 20% அதில் தான் சென்றாக வேண்டி இருக்கிறது. எனவே, கச்சா எண்ணெய் விலை உயரும் ஆபத்து இருக்கிறது.

தங்கம்

ஹார்முஸ் பிரச்சினை தீர்ந்துவிட்டது, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை ஏற்றாது என்ற உற்சாகத்தில் தங்கம் விலை ஏறி வருகிறது. மேலும், உலகளவில் இருக்கும் மத்திய வங்கிகள் சுமார் 51 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. ஜூன் மாதம் மட்டும் இவ்வளவு தங்கம் வாங்கியுள்ளனர். குறிப்பாக போலந்து 19 டன், சீனா 15 டன் தங்கத்தை வாங்கியுள்ளன.

இந்தாண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் 102 டன் தங்கத்தை, உலக நாடுகள் வாங்கியுள்ளன. உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகள் தங்கத்தை விற்ற நிலையில், இந்த நாடுகள் தங்கத்தை வாங்கியுள்ளன. எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் 102 டன் தங்கம் கூடுதலாக வாங்கப்பட்டுள்ளன.

வெயிட் பண்ணுங்க

என்னை கேட்டால் தங்கம் விலை ஏறுவது தற்காலிகம் தான். கண்டிப்பாக அமெரிக்காவில் பணவீக்கம் வரும். அங்கு வட்டி விகிதத்தை ஏற்றுவார்கள். அப்போது கண்டிப்பாக 300 டாலர் வரை தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் ரூபாய் விலை என்னவாகும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதை பொறுத்தே தங்கம் விலை இந்தியாவில் இருக்கும். எனவே, தேவை என்றால் மட்டுமே இப்போது தங்கத்தை வாங்குங்கள். இல்லை என்றால் 3 மாதங்கள் காத்திருங்கள்” என்றார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ள கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *