'தங்கம் மற்றும் பெட்ரோல் பயன்பாட்டைக் குறையுங்கள்' – பிரதமர் மோடியின் கோரிக்கையை வலியுறுத்திய ஆளுநர்

Spread the love

மத்தியக் கிழக்கு போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஹைதராபாத்தில் நேற்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர், “கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தே வேலை செய்வது (Work From Home) ஆன்லைன் கூட்டங்கள் போன்ற நடைமுறைகளுக்கு நாம் பழகியிருந்தோம். தேச நலன் கருதி இன்று நாம் மீண்டும் அந்த நடைமுறைகளைத் தொடருவது காலத்தின் கட்டாயமாகும்.

 பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பொதுமக்கள் திருமணத்திற்காக ஓராண்டுக்கு, தங்கம் வாங்க வேண்டாம் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். தேவையற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை மக்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகையில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், உலகளாவிய சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாட்டை வலுப்படுத்தும் நோக்கில், பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் விடுத்த வேண்டுகோளை மக்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பொறுப்பான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை ஆளுநர் வலியுறுத்தியிருக்கிறார்.

* முடிந்தவரை வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கு (Work from home) முன்னுரிமை அளித்தல்.

* எரிபொருள் நுகர்வைக் குறைத்தல்.

* அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்தல்.

* உள்நாட்டுத் தயாரிப்புகளைப் (Indigenous products) பயன்படுத்துதல்.

 ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

* சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்தல்.

* இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்தல்.

* தேவையற்ற தங்கம் வாங்குவதைத் தவிர்த்தல்.

மக்கள் அனைவரும் கூட்டுப் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும்” என்று ஆளுநர் வலியுறுத்தியிருக்கிறார்.

இத்தகைய முயற்சிகள் இந்தியாவின் மீள்தன்மையை மேலும் வலுப்படுத்தும் என்றும், சுயசார்பு இந்தியா நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *