தங்கம் என்றாலே இந்தியர்களுக்குத் தனிப்பிரியம். ஆனால், அதை வாங்கத்தான் தற்போது முட்டுக்கட்டைப் போட்டுள்ளது இந்திய அரசு.
அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாக்க வேண்டும் என்று ஓராண்டிற்கு தங்கத்தை வாங்க வேண்டாம் என்று இந்தியப் பிரதமர் மோடி இந்திய மக்களுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
தங்கம் இறக்குமதிக்கு செக் வைப்பதுபோல, தங்கம் இறக்குமதி வரி 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இப்படி இந்தியாவே தங்கம் வாங்குவதிலிருந்து ஒதுங்கி இருக்கும் இந்த நேரத்தில், சர்வதேச தங்க சந்தையில் ஒரு “குட் நியூஸ்’ எட்டிப்பார்த்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,400 – 4,500 டாலர்கள் ரேஞ்சில் வர்த்தகம் ஆகி வருகிறது.
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் கூறுகையில், ”சர்வதேச சந்தையில் தங்கம் விலை நன்கு குறைந்துள்ளது. தங்கம் வாங்குவதற்கு இதுதான் நேரம். ஆனால், இந்தியாவில் உள்ள கட்டுப்பாடுகளால் இப்போது இந்தியா இந்த விலை குறைவைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை” என்று பேசினார்.
போலாந்து, சீனா போன்ற நாடுகளின் மத்திய வங்கிகள் மட்டுமல்லாமல், இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளின் மத்திய வங்கிகளும் முதல் முறை மிக அதிகமாக தங்கத்தை வாங்கிக் குவித்திருக்கின்றன.