திருச்செந்தூர் கோவில்: “25 லட்சம் ரூபாய்க்கு முறைகேடு; கண்காணிக்காதது ஏன்?” – நீதிபதி கேள்வி | Judge questions about Irregularities amounting to ₹25 lakh have occurred at Tiruchendur temple

Spread the love

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கட்டண தரிசன முறை நடைமுறையில் உள்ளது. இதில் ரூ.100 டிக்கெட் பெறும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த ரூ.100 டிக்கெட் வினியோகம் செய்ததில் ரூ. 25 லட்சத்து 24 ஆயிரத்தை கோவில் ஊழியர்கள் முறைகேடு செய்ததாகப் புகார்கள் எழுந்தன.

அதன்பேரில் இந்தப் புகார் குறித்து விசாரிக்கப்பட்டதில் தற்காலிக பெண் ஊழியரான மேனகா என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் கணினி டிக்கெட்டுகளைச் சரி பார்க்காமலும் அலட்சியமாக இருந்ததாக கோவில் பணியாளர்கள் பாலமுருகன், உச்சிமாகாளி ஆகியோர் விளக்கம் அளிக்கும்படி கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் பாலமுருகன், உச்சிமாகாளி ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

இந்த மனு நீதிபதி தனபால் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “‘ரூ.25 லட்சம் வரை முறைகேடு நடந்து இருக்கிறது. இதனை உயர் அதிகாரிகள் முறையாகக் கண்காணிக்காதது ஏன்? திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு எத்தனை பக்தர்கள் வருகின்றனர். அவர்களால் எவ்வளவு வருமானம் வருகிறது. இந்த வருமானம் முறையாக வசூலிக்கப்படுகிறதா என ஆய்வு செய்வது அதிகாரிகளின் பணி தானே?” எனக் கேள்விகளை எழுப்பினார்.

விசாரணை முடிவில், இந்த முறைகேடு விவகாரத்தில் நடந்தது என்ன?, இதில் மனுதாரர்களின் பங்கு என்ன? என்பன குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *