Business
oi-Vigneshkumar
சென்னை: தங்கம் விலை இப்போது சடன் பிரேக் அடித்தது போல யூடர்ன் போட்டு குறைந்து வருகிறது. இப்படி தொடர்ந்து குறைந்து வருவதால் இப்போது தங்கத்தை வாங்கலாமா அல்லது சற்று காத்திருக்கலாமா என்ற குழப்பம் மக்களிடையே இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை ஏன் சரிகிறது.. இன்னும் எவ்வளவு சரியும்.. மக்கள் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக முக்கிய கருத்துகளை பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் பகிர்ந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் விலை கேப் விடாமல் தொடர்ந்து பறந்து கொண்டு வந்தது. கொரோனாவுக்கு பிறகு கண் இமைக்கும் நேரத்தில் அது ரூ.15,000ஐ கடந்திருந்தது. ஆனால், இப்போது சட்டென பிரேக் போட்டு யூடர்ன் அடித்தது போல தங்கம் விலை சரிய ஆரம்பித்துவிட்டது. தங்கம் விலை மேலும் சரியலாம் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆனந்த் சீனிவாசன்
பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசனும் கூட தங்கம் விலை சரியலாம் என்றே சொல்கிறார். அதேநேரம் சர்வதேச சந்தையில் சரிந்தாலும் இந்தியாவிலும் அதே அளவுக்கு சரியும் என சொல்ல முடியாது என்கிறார் ஆனந்த் சீனிவாசன். ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் தங்கம் சரிவது மாறலாம் என்பதே அவரது கருத்து.
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், “தங்கம் விலை வரும் காலங்களில் விழும். ஆனால், எந்தளவுக்கு விழும் என்பதை நம்மால் சொல்ல முடியாது. அமெரிக்க மத்திய வங்கி வட்டியை எவ்வளவு தூரம் உயர்த்துகிறார்கள் என்பதை பொறுத்தே அது இருக்கும். என்னை பொறுத்தவரை அமெரிக்காவில் 2 முறை வட்டி விகிதத்தை உயர்த்தினால் சர்வதேச சந்தையில் 3600 டாலர் வரை போகும். அதாவது தற்போதைய ரேட்டில் இருந்து 10 முதல் 15% வரை சரியலாம்.
இந்தியாவில் குறையுமா?
ஆனால், இந்தியாவிலும் அதே அளவு குறையும் என சொல்ல முடியாது. ஏனென்றால் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்படும்போது ரூபாய் மதிப்பு சரியும். ஏற்கனவே நமது நாட்டில் இப்போது டாலர் கையிருப்பு மோசமாக இருக்கிறது. எனவே, ரூபாய் மதிப்பை காப்பாற்ற கைவசம் இருக்கும் டாலரை அதிகமாக விற்க முடியாது. எனவே, இதுவும் பிரஷரை ஏற்படுத்தும்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை 15% விழுந்தாலும் ரூபாய் மதிப்பு 15% சரிந்துவிட்டால் தங்கம் விலையில் மாற்றம் இருக்காது. எனவே, டாலரில் 15% வரை சரியும் என தைரியமாக சொல்லலாம். ரூபாயில் எவ்வளவு விழும் என சொல்ல முடியாது. தற்போதைய சூழலில் ரூபாய் மதிப்பில் தங்கம் கிராமுக்கு ரூ.12,500க்கு கீழ் போய் இருக்க வேண்டும். ஆனால், இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் தங்கம் விலை ரூ.1000 உயர்ந்துவிட்டது. இப்படி பல விஷயங்கள் உள்ளன.
கோல்ட் ETF
கோல்ட் ETF குறைந்துவிட்டது உண்மை தான். இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் கோல்ட் ETF முதலீடு குறைந்துவிட்டது. வட்டி விகிதம் உயர போகிறது என்பதால் பலரும் தங்கத்தை விற்றுவிட்டு வட்டியை கொடுக்கும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய ஆரம்பிக்கிறார்கள். தங்கத்தில் ரிட்டரன் வராது. எனவே, கடன் பத்திரத்தில் வட்டி அதிகம் கிடைக்கும் என்பதால் இந்த பணத்தை எடுத்து அதில் போடுகிறார்கள்.
6 மாதம்
எனவே, தங்கம் அடுத்த 6 மாதம் விழ அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு தேவை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம். வாரம் அரை கிராம் அல்லது ஒரு கிராம் வாங்கலாம். குறைய குறைய வாங்கும் அளவை அதிகரித்து கொண்டே போகலாம். காயினாக வாங்கி தேவை என்றால் நகையாக மாற்றிக் கொள்ளுங்கள்” என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்

