சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தலைமை கட்சிக்குள் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார் என்கிறார்கள். தேர்தல் தோல்விக்கான காரணத்தை அறிய கள ஆய்வு குழுவை நியமித்தார் ஸ்டாலின்.
இதில் தோல்விக்கான காரணம் என்னவென்று தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் ஆலோசித்து கள ஆய்வு அறிக்கையை அக்குழுவினர் சமர்பித்தனர்.
மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் வாக்களிக்கவில்லை, விஜய் அலையைக் கவனிக்கத் தவறியது உள்ளிட்டவை தோல்விக்கான காரணங்களாகச் சொல்லப்பட்டுள்ளது என்கிறார்கள்.

இதே போல் கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலும் தோல்விக்கான காரணிகளில் ஒன்று. கள ஆய்வின் போதே இது பல தொகுதிகளில் வெடித்தது குறிப்பிடத்தக்கது. திமுக-வின் கோட்டைகளாக அறியப்பட்ட தஞ்சாவூர், கும்பகோணம் தொகுதிகளில் தோற்றதற்கு கோஷ்டி பூசல், உள்ளடி வேலை போன்றவை காரணம் என்று திமுக விசுவாசிகள் கூறி வருகின்றனர்.
தோல்வியால் துவண்டிருந்த திமுக-வினரை தலைமை எடுத்து வரும் முன்னெடுப்புகள் உற்சாகத்தைக் கொடுத்துள்ளன. அதிமுக-வில் பல மாவட்டங்களில் இருப்பது போல் இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமனம் செய்வதற்கான முயற்சியில் இருக்கிறார் ஸ்டாலின் என திமுக-வினரால் பரவலாகப் பேசப்படுகிறது.