International
oi-Prasanna Venkatesh
உலகையே உலுக்கி வந்த அமெரிக்க – ஈரான் இடையேயான போர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் சர்வதேச சந்தையிலும் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளின் பொருளாதாரத்தை முடக்கும் அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கிய இந்த போர், இறுதியாக இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானின் உச்ச தலைவர் முஜ்தபா கமேனி ஆகிய இருவருக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்பட்டு, இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளது என்பதைப் இந்த போர் பேச்சுவாத்தையில் முக்கியமாக விளங்கிய பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் வரலாற்று ஒப்பந்தம்
இந்த விவகாரம் குறித்துப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது டிவிட்டர் பக்கத்தில் மிக முக்கியமான தகவலை பகிர்ந்து உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தத்திற்கு மிக அருகில் வந்துவிட்டோம் என்று அவர் மகிழ்ச்சியுடன் உறுதிப்படுத்தியுள்ளார்.
அடுத்த 24 மணிநேரத்திற்குள் இந்த அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வடிவமைப்பு முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதனைத் தொடர்ந்து ஒப்பந்தத்தில் மின்னணு முறையில் (Electronic Signing) உடனடியாக இரு நாடுகளும் கையெழுத்திடுவதற்கான அனைத்து உள்கட்டமைப்பு ஏற்பாடுகளையும் பாகிஸ்தான் அரசு தயார் செய்து வருவதாகவும் மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் ஷெபாஸ் ஷெரீப்.
தொழில்நுட்பப் பேச்சுவார்த்தை
இந்த அமைதி ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தான உடனேயே, அதன் அடுத்தகட்ட உத்திகளை நடைமுறைப்படுத்துவதற்காக இரு நாடுகளுக்கு இடையேயான தொழில்நுட்ப அளவிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் (Technical level talks) அடுத்த வாரம் தொடங்கப்படவுள்ளன.
இந்த பேச்சுவார்த்தையின் போது உறுதுணையாக இருந்த அமெரிக்காவிற்கும், ஈரானிய குடியரசிற்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக அறிவித்தார்.
விடியல் பிறக்கிறது
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தமானது, வளைகுடாப் பகுதியில் நீண்ட கால அமைதியை நிலைநாட்டுவதற்குக் அடித்தளமாக அமையும் என்று சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் பலரும் முழுமையாக நம்புகின்றனர்.
இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறும்போது, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத் தட்டுப்பாடு நீங்கி, சர்வதேசச் சந்தை மீண்டும் வழக்கம் போல் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.