தன் தவறான அனுமானத்தால், அண்ணனுக்குத் தீங்கு இழைத்துவிட்டதாகக் கருதிய சுக்ரீவன், அதற்குப் பரிகாரம் தேடியும். வாலியால் தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கவும், சிவபெருமானை வேண்டினான்.
உடனே சுக்ரீவனை, அன்னப் பறவையாக உருமாற்றி வாலியிடமிருந்து காப்பாற்றியதுடன், `ஆடுதுறைக்குச் சென்று வழிபடுக” என்றும் அருளினார் ஈசன். சுக்ரீவனை ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் இத்தலத்து ஈசன் ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார் என்கிறது தல புராணம்.
ஒருமுறை, நாரதர் ஆகாய வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, ஓரிடத்தில் அனுமன் இருப்பதைக் கண்டு கீழே இறங்கினார். அனுமன் ராமனைத் துதிப்பதில் தன்னையே மறந்திருந்ததால் நாரதர் வருவதைக் கவனிக்கவில்லை.
அதனால் சினம்கொண்ட நாரதர் அனுமனின் சங்கீத கலை மறந்து போகுமாறு சபித்தார். இந்தச் சாபத்திலிருந்து விடுபட அனுமன் இத்தலத்து ஈசனை வணங்கி கலைகளைத் திரும்ப பெற்றாராம்.

தில்லையில் ஈசன் நிகழ்த்திய திருநடனக் காட்சியைக் காண தேவர்களும் பிற முனிவர்களும் ஈசனிடம் ‘எங்களுக்கும் அந்த நடனம் காணும் பாக்கியத்தை அருள வேண்டும்’ என்று வேண்டினர். அதன்படி இத்தலத்தில் சிவபெருமான் திருநடனம் ஆடி அருளினார். எனவே, நடனக் கலைஞர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய தலம் இதுவாகும்.
இத்தலத்தில் முருகன் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற பெருமைக்குரியவர். சுவாமியின் கருவறைச் சுற்றிலுள்ள அண்ணாமலையாரின் கண்களும், முருகப்பெருமானின் கண்களும் சமதளத்தில் நேருக்கு நேராகச் சந்திப்பது போன்ற அமைப்பு, வேறு எந்த ஆலயத்திலும் காண்பதற்கரிய சிறப்பாகும்.