அப்பர், சம்பந்தர், சுந்தரர், குந்திதேவி சிவனைப் பூஜிக்கும் திருக்கோலம், அமர்நீதி நாயனார், சண்டேசுவரர், துர்கை, நடராசர் நர்த்தனமாடும் திருச்சிற்றம்பலம், சனீஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் மற்றும் அம்பிகையுடன் இரு சிவலிங்கத் திருமேனிகள் ஆகியோரும் சந்நிதி கொண்டு அருள்கின்றனர்.
இந்தப் பிராகாரத்தின் மத்தியில் சுமார் 14 அடி உயர மாடத்தில் இருக்கின்றன, சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகள். தென்புறமாக இருக்கும் படிகளில் ஏறி உள்ளே நுழைந்தால், முதலில் கண்களில் படுவது அம்பாள் சந்நிதி. அழகே உருவாக, ஆஜானுபாகுவாகக் காட்சி தருகிறாள் கிரிசுந்தரி.
தமிழில் ‘மலையழகி’ என்று திருப்பெயர். பெயருக்கேற்ப அழகிய உருவம் கொண்டு, மடிசார் புடவையும், மந்தகாசப் புன்னகையுமாக நம்மை ஆட்கொள்கிறாள். அன்னையை வணங்கிவிட்டு, சுவாமி சந்நிதிக்குள் நுழைகிறோம்.

கிழக்கு நோக்கி அருளும் ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரரின் திருமேனி, ஆன்மிக அற்புதங்களில் ஒன்று. ஆம்! தினமும் ஆறு நாழிகைக்கு ஒருமுறை நிறம் மாறுகிறார் இந்தச் சுவாமி. முதல் ஆறு நாழிகையில் தாமிர நிறத்தில் காட்சி தரும் இந்தச் சிவனாரின் லிங்கத் திருமேனி, அடுத்தடுத்து முறையே இளஞ்சிவப்பு, உருக்கிய தங்கம், நவரத்தினப் பச்சை ஆகிய வண்ணங்களில் காட்சி தரும்.
கடைசி ஆறு நாழிகைகளில், இன்ன நிறம் என்று இனம்காண இயலாத ஒரு நிறத்தில் காட்சியளிப்பாராம் இந்தச் சிவனார்.
இப்படி ஐந்து நிறங்களில் காட்சி தருவதால், ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் என்றும், இந்தத் தலத்தில் அமர்நீதி நாயனார், அப்பர் ஆகியோரை ஆட்கொண்டதால் ஸ்ரீஆண்டார் என்றும், அகத்தியருக்குத் திருமணக் கோலத்தைக் காட்டியமையால் ஸ்ரீகல்யாணசுந்தரர் என்றும், மிகக் பேரழகுடன் திகழ்வதால் சுந்தரநாதன், சவுந்தரநாயகர் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறார் இந்தச் சிவனார்.