அம்பாள் பெரியநாயகியாய்… நம் உடற்பிணிகள் மற்றும் உள்ளப் பிணிகளைத் தீர்க்கும் மருத்துவ நாயகியாய் அருள்பாலிக்கிறாள். அக்கமாலை, தாமரை ஏந்தியும் அபயம், வரத முத்திரைகளைக் காட்டிபடியும் நான்கு திருக்கரங்களுடன் நின்றகோலத்தில் அருளும் இந்த அம்மனை வழிபட, அனைத்து நோய்களும் முற்றிலும் அழிந்து போகும் என்கிறார்கள். மேலும் குடும்பத்தில் நிம்மதி, ஆரோக்கியம், ஒற்றுமை வேண்டியும் இந்தத் தாயை வழிபடுகின்றனர்.
திருக்கோயிலின் முன்புறம் மூன்று படித் துறைகளுடன் திருக்குளம் அமைந்துள்ளது. இதில் நீராடி, சுவாமியையும் அம்மையையும் வழிபட்டால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்பது ஐதிகம்.

கோயிலின் மேற்கில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானும், கிழக்குப் பகுதியில் – சனீஸ்வரர், பைரவர், லட்சுமி நாராயணர் ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர். சூரியதேவனும் இங்கு வழிபட்டுள்ளார்.
இதை மெய்ப்பிக்கும் விதமாக ஆருத்ரா புண்ணிய தினத்தில் காலை வேளையில், தன் கிரணங்களால் இறைவனின் திருவடியைத் தொழுது வணங்குகிறார் சூரியன். இந்தக் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்.
அதேநாளில் இங்கு அஸ்வினி தேவர்களுக்குக் குதிரை பூஜை செய்யப்படும். இங்குள்ள அனுகிரக சனியை வழிபட்டால், எவ்வகை சனிதோஷம் இருந்தாலும் விலகும். அஸ்வினி, ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட்டுப் பூஜை செய்தால், அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்கிறார்கள் இங்குள்ள பக்தர்கள்.
மகிமைகள் வாய்ந்த இந்தத் தலத்துக்கு வாய்ப்பிருப்பவர்கள் சென்று வாருங்கள். உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.