வெப்பம் அதிகமாக இருக்கும்போது, மூளையின் ரத்தக் குழாய்கள் விரிவடைந்து அதன் மூலமாகவும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக, மிக அதிக வெப்பம் மற்றும் காற்றில் ஈரப்பதம் (Humidity) அதிகமாக இருக்கும் சூழலில், உடலின் வெப்பத்தை வியர்வை மூலமாக வெளியேற்றி சருமத்தைப் பாதுகாக்கும் உடலின் பாதுகாப்பு மெக்கானிசம் (Protection mechanism) செயலிழந்து போகலாம்.
அந்த நேரத்தில், உடலின் உட்பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் (Deeper blood vessels) விரிவடைந்து, அதன் காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதாலும் தலைவலி ஏற்படலாம்.
ஒற்றைத் தலைவலி (Migraine) பிரச்னை உள்ளவர்களுக்கு, அந்தத் தலைவலியைத் தூண்டக்கூடிய காரணிகளில் (Trigger points) வெயிலும், அதிகப்படியான வெப்பமும் மிக முக்கியமாக இருக்கின்றன.
கடுமையான வெயிலில் இருந்துவிட்டு, திடீரென ஏசி அறைக்குள் நுழையும்போதோ அல்லது குளிர்ந்த நீரை அதிகம் குடிக்கும்போதோ மூளையின் ரத்தக் குழாய்கள் சட்டென்று சுருங்கி விரிவடைவதால் தலைவலி ஏற்படும்.

தலைவலி வராமல் தடுக்க, தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், வெயிலில் செல்லும்போது அரை மணி நேரத்திற்கு ஒருமுறை சிறிதளவாவது தண்ணீர் குடிக்க வேண்டும். வெறும் தண்ணீருக்குப் பதிலாக இளநீர், மோர், எலுமிச்சைப்பழச் சாறு அல்லது ஓஆர்எஸ் (ORS) போன்ற எலக்ட்ரோலைட் நிறைந்த பானங்களைக் குடிப்பது உடலின் உப்புத்தன்மையைச் சமமாக வைத்திருக்கும்.
காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் குடை, கூலிங்கிளாஸ் (Sunglasses) உபயோகிப்பது, காட்டன் ஆடைகளை அணிவது போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும். இவை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து ஓரளவு பாதுகாப்பு தரும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.