கேரள மாநில பா.ஜ.க தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தனது இரங்கல் குறிப்பில், “தனது வித்தியாசமான நகைச்சுவை மூலம் தலைமுறைகளைச் சிரிக்க வைத்த ஒரு அரிய திறமையாளர் அவர். நகைச்சுவைத் தாண்டி, இதயம் தொடும் வலிமையான கதாபாத்திரங்கள் மூலமும் அவர் தனது சிறந்த நடிப்புத் திறமையை நிரூபித்தார். மலையாள சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துவிட்டு அவர் விடைபெறுகிறார். அவர் உயிர் கொடுத்த அழியாத கதாபாத்திரங்கள் மக்கள் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும். அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்களின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் மோகன்லால் தனது இரங்கல் குறிப்பில், ”ரசிகர்களை ஒரே நேரத்தில் சிரிக்க வைக்கவும், சிந்திக்க வைக்கவும் செய்த எத்தனையோ சிறந்த கதாபாத்திரங்களைப் பரிசாக அளித்துவிட்டுத்தான் அன்பிற்குரிய சலிம்குமார் விடைபெற்றிருக்கிறார். தேசிய விருது வரை வென்ற அசாத்திய திறமை கொண்ட கலைஞர். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதிலும், அவர்களைத் தன் சொந்தச் சகோதரர்களைப் போல அணைத்துக் கொள்வதிலும் அப்பழுக்கற்ற அன்பிற்குச் சொந்தக்காரர். பல திரைப்படங்களில் அவருடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. சினிமாவிற்குள்ளும் வெளியேயும் அவர் எனக்கு ஒரு நல்ல நண்பராகவும் விளங்கினார். சமூகப் பிரச்னைகளைக் கூர்ந்து கவனிப்பதும், அதைப் பற்றித் தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பதிவு செய்யும் குடிமைப் பொறுப்பும் எல்லாக் காலத்திலும் அவரிடம் இருந்தது. பிரியமான நண்பனுக்கு வேதனையுடன் என் அஞ்சலிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் மம்மூட்டி தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பில், ”சிரித்துக் கொண்டும், மற்றவர்களைச் சிரிக்க வைத்துக் கொண்டும், சிந்தித்துக் கொண்டும், மற்றவர்களைச் சிந்திக்க வைத்துக் கொண்டும், இடையில் அழுதும், மற்றவர்களை அழவைத்தும் வந்த சலீம்…
இப்போது நீ எங்களை அழ வைத்துக் கொண்டு மட்டும்தான் இருக்கிறாய். சகோதரா, உன்னுடைய மறைவு ஒருபோதும் தீராத பெரும் துயரமாக மாறிவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.