Tamilnadu
oi-Vignesh Selvaraj
திண்டுக்கல்: “தமிழகத்தில் கள்ளுக்கடை திறப்பதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து முதல்வரிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கள்ளுக் கடைகள் திறக்கும் விவகாரத்தில் அரசு சரியான முடிவை எடுக்கும்” என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சி அமைந்தபிறகு தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம், கள்ளுக் கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்றும், கள் விற்பனைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழக அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ், ஒரு அறிக்கை தயார் செய்து முதல்வர் அலுவலகத்தில் சமர்ப்பித்திருக்கிறாராம். கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் முதல்வர் விஜய் விரைவில் முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷ் பேசுகையில், “ஏற்கனவே கள்ளுக்கடை திறந்தால், என்னென்ன சாதக, பாதகங்கள் இருக்கிறது என்பது குறித்து அறிக்கையை முதல்வர் அலுவலகத்தில் கொடுத்து விட்டேன். இப்போது, கள்ளுக் கடைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறேன்.
கேரளா செல்லும் சாலைகளில் நிறைய சாராயம் பிடிபட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது பற்றி விசாரிக்கும் போது, அது கள்ளுக்கடைகளுக்கும் போவதாக தகவல் வருகிறது. அதனால், கள்ளுக்கடைகளை திறப்பது குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். விரைவில் சரியான முடிவை அரசு எடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.