தமிழக அரசின் இடைக்கால ஓய்வூதியம்.. அரசு ஊழியர்களின் சந்தேகமும்.. பதில்களும் | Doubts and answers for retiring government employees receiving the interim pension

Spread the love

Tamilnadu

oi-Velmurugan P

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு இடைக்கால ஓய்வூதியம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி அல்லது அதற்குப்பிறகு முறையான பணியில் சேர்ந்து, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (சி.பி.எஸ்.) இடம் பெற்றுள்ள அரசு ஊழியர்கள், கடந்த ஜனவரி 1-ந் தேதி அல்லது அதற்குப்பிறகு குறைந்தது 10 ஆண்டுகள் பணி புரிந்து வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறுபவர்களுக்கு அரசு மாதந்தோறும் இடைக்காலத் தொகை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதுபற்றி அரசு ஊழியர்களுக்கு எழும் சந்தேகங்களையும் பதில்களையும் பார்ப்போம்..

2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது மொத்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களில் சுமார் 70 சதவீதம் பேர் இந்தப் புதிய திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். இதில் 7,864 பேர் பணியில் இருக்கும்போதே பல்வேறு காரணங்களால் இறந்துள்ளனர். 45,625 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.

Doubts and answers for retiring government employees receiving the interim pension

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களிடம் இருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, அதே அளவு தொகையை அரசும் பங்களிப்பாகச் செலுத்தும். அவசரத் தேவைக்கு அந்த நிதியிலிருந்து தொகை எடுக்கும் வசதியும் இருந்தது. மேலும், ஓய்வுக்குப் பிறகு பணிக்கொடை, மாதாந்திர ஓய்வூதியம், ஓய்வூதியர் மறைவுக்குப் பின் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பல பலன்கள் கிடைத்தன. ஆனால் புதிய திட்டத்தில் இத்தகைய பலன்கள் கிடையாது. பணியில் இருந்தபோது பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்புத் தொகை மட்டுமே திருப்பித் தரப்படுகிறது.

தமிழ்நாட்டில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றும் நிலையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்தக் கோரி கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கங்கள் போராடி வந்தன.

2011ல் அதிமுக, 2016 மற்றும் 2021ல் திமுக தலைமையிலான அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்தன. 2011 வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக ஜெயலலிதா அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால் அந்த அறிக்கை இதுவரை வெளியாகவில்லை.

2021ல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு , 2026 சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு ‘TOPS’ (Tamil Nadu Old Pension Scheme) திட்டத்தை 2026 ஜனவரி முதல் அமல்படுத்துவதாக அறிவித்தது. ஆனால் இதுவரை விதிகள் வகுக்கப்படவில்லை. இதனால் கட்டாய ஓய்வு பெறுபவர்களும், ஓய்வு பெறவிருப்பவர்களும் பணப்பலன்கள் இன்றி மிகுந்த மன உளைச்சலில் இருந்தனர். இதையடுத்த விஜய் தலைமையிலான தமிழக அரசு இடைக்கால ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களை விரிவாக பார்ப்போம்.

சந்தேகம் 1 : டிபிஎஸ் திட்டம் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதே, பிறகு ஏன் இந்த புதிய இடைக்கால ஓய்வூதியத் திட்டம்?

விளக்கம்: ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டம்’ (டேப்ஸ்) கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டாலும், அதற்கான விரிவான விதிமுறைகள் மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் இன்னும் முழுமையாக உருவாக்கப்பட்டு வருகின்றன. அவை தயாராகி நடைமுறைக்கு வரும் வரை, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக ஒரு இடைக்கால ஏற்பாடாக இந்த மாதாந்திர வாழ்வாதாரத் தொகை வழங்கப்படுகிறது.

சந்தேகம் 2: இந்த இடைக்கால ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன்பெற யார் யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள்?

பதில்: கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி அல்லது அதற்குப் பிறகு முறையான அரசுப் பணியில் சேர்ந்திருக்க வேண்டும்.

அப்படி சேர்ந்த அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) இடம் பெற்றிருக்க வேண்டும்.

கடந்த ஜனவரி 1-ந் தேதி அல்லது அதற்குப் பிறகு குறைந்தது 10 ஆண்டுகள் பணி முடித்து, வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

சந்தேகம் 3 : டிபிஎஸ் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் எவ்வளவு பணம் ஓய்வூதியமாகக் கிடைக்கும்? கணக்கீடு எப்படி?

பதில்: ஓய்வு பெற்ற ஊழியர் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது பத்தாயிரம் ரூபாய் – இதில் எது அதிகத் தொகையோ அந்தத் தொகை எடுத்துக்கொள்ளப்படும். அதனுடன், நடப்பில் இருக்கும் அகவிலைப்படி நிவாரணத்தில் 50 சதவீதம் சேர்த்து மாதந்தோறும் இடைக்காலத் தொகையாக வழங்கப்படும்.

சந்தேகம் 4 : பணியில் இருக்கும்போதே அரசு ஊழியர் இறந்துவிட்டால் குடும்பத்தினருக்கு ஏதேனும் பலன் இருக்கிறதா?

விளக்கம்: ஆம், நிச்சயம் உண்டு. கடந்த ஜனவரி 1-ந்தேதிக்கு பிறகு பணியில் இருக்கும்போது மரணமடையும் அரசு ஊழியர்களின் தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த இடைக்காலக் குடும்பத்தொகை வழங்கப்படும். இதற்கும் அதே கணக்கீடுதான்.. இறந்த அரசு ஊழியரின் கடைசி அடிப்படை ஊதியத்தின் 30% அல்லது ₹10,000 (எது அதிகமோ அது) + 50% அகவிலைப்படி நிவாரணம் சேர்த்து வழங்கப்படும்.

சந்தேகம் 5 : இந்த இடைக்கால ஓய்வூதியத்தைப் பெற்று வரும் ஓய்வூதியர் திடீரென மரணமடைந்தால், அவரது குடும்பத்திற்குப் பணம் கிடைக்குமா?

விளக்கம்: ஆம். இடைக்காலத் தொகை பெற்று வந்த ஓய்வூதியர் பின்னர் மரணமடைந்தால், அவருக்கு எவ்வளவு இடைக்கால மாதாந்திரத் தொகை வழங்கப்பட்டு வந்ததோ, அதில் 60 சதவீதம் (60%) குடும்ப ஓய்வூதியமாக அவரது குடும்பத்தினருக்குத் தொடர்ந்து வழங்கப்படும்.

சந்தேகம் 6 : இந்த இடைக்காலத் தொகையைப் பெற அரசு ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும்? இதற்கு ஏதேனும் காலக்கெடு உள்ளதா?

விளக்கம்: இந்தத் தொகையைப் பெற விரும்பும் ஓய்வூதியர்கள் அல்லது தகுதியான குடும்ப உறுப்பினர்கள், இந்த அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களுக்குள் உரிய உறுதிமொழி படிவத்தில் தங்களின் விருப்பத்தைத் தெரிவித்து விண்ணப்பிக்க வேண்டும்.

சந்தேகம் 7: டிபிஎஸ் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்த பிறகு எந்தத் தேதியில் இருந்து இந்த இடைக்காலப் பணம் கணக்கிட்டு வழங்கப்படும்?

விளக்கம்: நீங்கள் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற தேதிக்கு அல்லது அரசு ஊழியர் மரணமடைந்த தேதிக்கு அடுத்த நாளில் இருந்தே இந்த இடைக்காலத் தொகை கணக்கிடப்பட்டு உங்களுக்கு வழங்கப்படும்.

இது நிரந்தர ஓய்வூதியம் அல்ல; பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கும் இதற்கும் நிச்சயம் சம்பந்தமில்லை. புதிய ‘டேப்ஸ்’ (TAPS) திட்டத்தின் முழுமையான விதிகள் தயாராகும் வரை, சிபிஎஸ் திட்டத்தில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யத் தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஒரு இடைக்கால நிதியுதவிப் பாதுகாப்பு வளையம் தான் இந்த திட்டம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *