தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி தொடங்குவதும், தேசிய கீதம் இசைத்து நிறைவு செய்வதும் பல ஆண்டுகளாக மரபாக இருந்து வருகிறது. இந்த நடைமுறையை மாற்றும் வகையில் ஆளும் பாஜக அரசு அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டது. அதில், அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாட வேண்டும். அதை தொடர்ந்து தேசிய கீதம் பாடல் பாட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு தொடர்புடைய அரசு நிகழ்வுகளிலும், ஆளுநர் பங்கேற்கும் அரசு நிகழ்வுகளிலும் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டது. இது தமிழ்நாட்டு மக்களிம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, சர்ச்சையானது.

ஏற்கெனவே திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்பட்டது. அதை மாற்றும் வகையிலேயே மத்திய அரசின் புதிய அறிவிப்பு வந்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகச் சட்டமன்றத்தில் நேற்று (ஆகஸ்ட்10) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தவெக அரசின் இந்த முன்னெடுப்பை அரசியல் தலைவர்கள் வரவேற்று வருகின்றனர். அதன் அடிப்படையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன் எக்ஸ் பக்கத்தில், “அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சிக்குரியது; வரவேற்கத்தக்கது. மாநில உரிமைகளை விட்டுத்தராத இந்தப் போக்கு தொடரவேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.