
பட்ஜெட் குறித்து முன்னாள் முதலமைச்சரும், திமுக எம்.எல்.ஏவுமான ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட முடியாது என்றும், கூறிய திட்டங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் செயல்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், ஓ.பன்னீர்செல்வம் தற்போது இருக்கும் அரசியல் நிலைப்பாட்டை குறிப்பிட்ட செங்கோட்டையன், “ஓ.பன்னீர்செல்வம் இடம் மாறியிருப்பதற்காக இவ்வளவு துதி பாட வேண்டும் என்று அவசியம் இல்லை” என்று கருத்து தெரிவித்தது அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடி கொடுத்த ஓ.பன்னீர்செல்வம், “முதலில் இடம் மாறியது செங்கோட்டையன் தான்” எனக் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே நேரடி வார்த்தை மோதல் உருவானது.
அதற்கு அமைச்சர் ராஜ்மோகன், “ஓ.பன்னீர்செல்வம் இடத்தை மட்டும் அல்ல இதயத்தையும் மாற்றிவிட்டார்” என பேசினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் பயணத்தையும், அவர் தற்போது வைத்திருக்கும் தலைவர்களின் புகைப்படம் குறித்தும் கேள்வி எழுப்பினார். அதாவது, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறுகையில், ”இடத்தை மாற்றியபோது அவரின்(செங்கோட்டையன்) இதயத்தின் அருகே வைத்துள்ள நிழல் படத்தை மாற்றவேண்டாம் என கூறினார் முதலமைச்சர் விஜய். ஜெயலலிதா இருந்த காலத்திலேயே முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் யார் படத்தை தற்போது வைத்துள்ளார் பாருங்கள்” என்று விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், அண்ணா, ஜெயலலிதா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் தனது மனதில் இருப்பதாக தெரிவித்தார். தலைவர்களின் புகைப்படங்களை வைத்து தனது அரசியல் நிலைப்பாட்டை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.
பட்ஜெட் விவாதத்தை தாண்டி, “யார் முதலில் அரசியல் அணி மாறியது?” என்ற விவகாரம் சட்டப்பேரவையில் எதிரொலித்ததால், ஆளும் தரப்பு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையேயான இந்த மோதல் பேசுபொருளாகியுள்ளது.