பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் “கடையடைப்பு’ போராட்டத்தை அறிவித்திருக்கின்றன. இந்தச் சூழலில், தமிழக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷிடம் துறை சார்ந்த நமது கேள்விகளை முன்வைத்தோம்…
“இல்லையில்லை… காலி பாட்டிலைத் திரும்பப் பெறுவதற்கான வைப்புத்தொகையாக 10 ரூபாய் வசூலிப்பதை நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. அதையும்தாண்டி கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டதைத்தான் கேள்வி கேட்கிறோம்.”
“அப்படியென்றால், ஊழியர்களுக்கு இவ்வளவு பிரச்னைகள் இருக்கின்றன என்பது கடந்த ஆட்சியாளர்களுக்குத் தெரிந்திருக்கிறதுதானே… இதையெல்லாம் தீர்ப்பதற்கான முயற்சிகளை அவர்கள் எடுத்திருக்க வேண்டாமா? ‘பிரச்னைகள் இருப்பதால், பாட்டிலுக்குக் கூடுதலாக 10 ரூபாயை வாங்கிக்கொள்’ என்று சொல்பவர்கள்தான் சிறந்த ஆட்சியாளர்களா? ‘லஞ்சம் வாங்கிக்கொள்’ என்று ஒருவர் சொல்கிறார் என்றால், அவரும் லஞ்சம் வாங்குபவராகத்தானே இருப்பார்!
ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஜனநாயக ரீதியிலாக பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான பிரச்னைகளைக் கண்டறிந்து அதைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுக்கிறோம். தடாலடியாக சட்டம் போட்டு, ‘இப்படித்தான் நீங்கள் மாறியாக வேண்டும்’ என்று சர்வாதிகாரமாக எதையும் செய்யவில்லை. அதனால்தான், இப்போது 10 ரூபாயிலிருந்து 5 ரூபாய், 2 ரூபாய் எனக் குறைத்து வாங்குவதாக செய்திகள் வருகின்றன.
குறிப்பாக கோயம்புத்தூர் பகுதிகளில் கூடுதல் விலை என எந்தத் தொகையுமே வாங்குவதில்லை என்ற செய்திகள் கிடைத்திருக்கின்றன. இதுநாள்வரை நடைபெற்றுவந்த மோசடிகளிலிருந்து இதுவே மிகப்பெரிய மாற்றம்தான். வரும் நாட்களில், முற்றிலுமாக மோசடி, முறைகேடுகளை ஒழித்துக்கட்டி ஊழலற்ற நிர்வாகத்தைக் கொண்டுவந்தே தீருவோம்!”
“கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சில குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்கள் மது வகைகளை மட்டுமே விற்கச்சொல்லி டாஸ்மாக் துறையில் ஆதிக்கம் செலுத்திவந்தன. த.வெ.க ஆட்சிக்குப் பிறகு, இந்த நிலை மாறியிருக்கிறது. எந்தவித பாகுபாடுமன்றி அனைத்து நிறுவனங்களின் மது வகைகளையும் விற்கச் சொல்லி வருகிறோம்.
நுகர்வோரே தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொள்ளட்டும் என்று நடைமுறையை மாற்றியிருக்கிறோம். எனவே, யாருக்கும் எந்த மன அழுத்தமும் இல்லை. இதைத்தாண்டியும் பிரச்னைகள் இருந்தால், நடைபெறவிருக்கிற பேச்சுவார்த்தையில் அதுகுறித்தும் பேசி, பிரச்னையைக் களைவதற்கான முடிவுகள் எடுக்கப்படும்”