மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று 31-வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாடு குறித்து மதிமுக தலைவர் வைகோ நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை ஒன்றும் ஆச்சரியகரமானது அல்ல. இருப்பினும், அவரது போக்கும் நடவடிக்கைகளும் அனைத்து மாநிலங்களின் தனித்தன்மையையும் தகர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில், மாநில உரிமைகளைச் சாடியும், இந்தி ஆதிக்கத்தையும் இந்துத்துவா கொள்கையையும் நிலைநாட்டத் துடிக்கும் அமித் ஷா மீது எங்களுக்கு எந்தவித நம்பிக்கையோ அல்லது உடன்பாடோ கிடையாது. மேகதாட்டு அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு முழங்கி வரும் சூழலில், அம்மாநிலத்தில் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்ட அநியாயம் நடந்துள்ளது.