பெங்களூருக்கு துணி வாங்கப் போவதாககூறி தாய், மகன், பேத்தி என குடும்பத்துடன் எம்.டி.எம்.ஏ கடத்தல்! | Kerala family arrested in mdma smuggling

Spread the love

கேரளாவில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க “ஆபரேஷன் தண்டர்’ என்ற பெயரில் கலால் அமலாக்கம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், பெங்களூருவிலிருந்து பெரும் அளவில் சிந்தடிக் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக கலால் வட்ட ஆய்வாளர் ஹிரோஷ் வி.ஆருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தை அதிகாரிகள் பல நாட்களாகத் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

​இந்தக் கடத்தல் பின்னணியில் இருந்த முக்கிய நபரான ஈஞ்சக்கல் பகுதியைச் சேர்ந்த கிரண் (33), போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவ ஒரு கச்சிதமான திட்டத்தைத் தீட்டினார்.

தனது தாய் பீனா (50), எட்டு வயது மகள் மற்றும் தனது பெண் தோழியான தமிழ்நாடு திருநெல்வேலியைச் சேர்ந்த சந்தியா (18), சாலா பகுதியைச் சேர்ந்த அக்‌ஷய் ஏ.எஸ். நாயர் (26)  ஆகியோருடன் பெங்களூருக்கு போதைப்பொருள் வாங்க காரில் புறப்பட்டார்.​ பெங்களூருவில் திட்டமிட்டபடி போதைப்பொருளை வாங்கிய இவர்கள், கண்துடைப்புக்காகச் சில ஆடைகளையும் வாங்கிக் கொண்டு கேரளா நோக்கித் திரும்பினர்.

அதிகாரிகள் காரைச் சோதனையிட்டால் ஓணம் பண்டிகைக் காலத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதற்காக மொத்தமாக துணி எடுக்க பெங்களூர் சென்றதாக கூறலாம் என திட்டமிட்டனர். காரின் மியூசிக் சிஸ்டத்திற்குள் 125 கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருளை மறைத்து வைத்தபடி பயணித்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த கிரண், குடும்பமாக சென்றால் தன் மீது யாருக்கும் சந்தேகம் வராது என்ற ஒரே காரணத்திற்காகத் தனது எட்டு வயது பெண் குழந்தையையும் இந்த போதைப்பொருள் கடத்தலில் கேடயமாகப் பயன்படுத்தியிருந்தார்.

எம்.டி.எம்.ஏ

எம்.டி.எம்.ஏ
மாதிரி படம்

அனைத்துத் திட்டங்களையும் பக்காவாக முடித்துவிட்டு கேரளாவுக்குள் நுழைந்த அந்தக் கார், நெய்யாற்றின்கரை ஆறாலும்மூடு சந்தைக்கு முன்பாக வந்தபோது, அங்கிருந்த கலால் சிறப்புப் படையினர் காரை சுற்றி வளைத்தனர். காரை அங்குலம் அங்குலமாகச் சோதனையிட்ட அதிகாரிகள், சிஸ்டத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 125 கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருளைக் கண்டெடுத்துப் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்த ரூ.10,500 ரொக்கம் மற்றும் நான்கு செல்போன்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். காரில் இருந்த எட்டு வயதுச் சிறுமியைப் பாதுகாப்பாக மீட்ட அதிகாரிகள், உடனடியாக உறவினர்களை வரவழைத்து முறைப்படி ஒப்படைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *