Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: ஐபிஎல் வரலாற்றில் அடுத்த பெரிய டிரேட் நடப்பதற்கான சாத்தியங்கள் தென்பட தொடங்கியுள்ளன. அதுவே இந்திய ரசிகர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் விலகியதைத் தொடர்ந்து, அவரைத் தங்களது அணியில் ஒப்பந்தம் செய்ய பல முன்னணி அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
குறிப்பாக கேகேஆர் அணி ரிஷப் பண்ட்-ஐ வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி இருக்கிறது. அந்த அணிக்கு நட்சத்திர வீரர் மட்டுமல்லாமல் ஒரு கேப்டனும் தேவையாக இருக்கிறது. இதனால் ரிஷப் பண்ட் வந்தால், அந்த இடத்தை எளிதாக நிரப்பலாம் என்று கணக்கு போட்டது. ஆனால் லக்னோ அணியின் பெரிய நிபந்தனையால் கேகேஆர் உடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது தெரிய வந்துள்ளது.

ரிஷப் பண்ட் டிரேட் செய்யப்பட வேண்டும் என்றால், கேகேஆர் அணி சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி அல்லது சுனில் நரேன் ஆகிய இருவரில் ஒருவரைத் தங்களுக்கு டிரேடிங் செய்ய வேண்டும் என லக்னோ டிமான்ய் வைத்துள்ளது. இது கேகேஆர் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கேகேஆர் அணியின் சாம்பியன் பவுலர்களாக சுனில் நரேன் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருக்கின்றனர்.
இவர்கள் இருவரையும் எந்தச் சூழலிலும் டிரேட் செய்ய கேகேஆர் நிர்வாகம் விரும்பவில்லை. லக்னோவின் இந்த கோரிக்கையின் காரணமாகவே, இரு அணிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருக்கிறது. கேகேஆர் பின்வாங்கியதைத் தொடர்ந்து, ரிஷப் பண்ட்-ன் பழைய அணியான டெல்லி உள்ளே புகுந்து டீலை முடிக்க பார்க்கிறது.
ரிஷப் பண்ட்-ஐ மீண்டும் டெல்லி அணிக்கு கொண்டு வர, லக்னோ அணிக்கு ஒரு மெகா ஆஃபரை டெல்லி கொடுத்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை லக்னோ அணிக்கு டிரேட் செய்வதோடு, கூடுதலாக ரூ.15 கோடி பணத்தையும் கொடுக்க டெல்லி அணி நிர்வாகம் முன் வந்துள்ளது. லக்னோ அணிக்கு தரமான ஸ்பின்னர் தேவைப்படுவதால், குல்தீப் யாதவ் மற்றும் ரூ.15 கோடி ஆஃபர் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இதனால் டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான இந்த ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட வாய்ப்புகள் குறைவு என்றும் சொல்லப்படுகிறது.