“குடும்பத்தைக் கவனிக்காமல் கட்சிக்காக உழைத்த என்னை எம்.எல்.ஏ-வுடன் உள்ளவர்கள் புறக்கணித்து வருகிறார்கள்; என் சாவுக்கு அவர்களே காரணம்” என்று த.வெ.க நகரச் செயலாளர் பேசிய ஆடியோ தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி த.வெ.க நகரச் செயலாளராக இருந்து வரும் ரமேஷ், பென்னாகரம் எம்.எல்.ஏ கஜேந்திரன் மீதும் அவர் ஆதரவாளர்கள் மீதும் குற்றம்சாட்டி ஆடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து குடும்பத்தினரால் தடுக்கப்பட்டுள்ளார்.
பரபரப்பு ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து விசாரித்தபோது, ”புஸ்சி ஆனந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பென்னாகரம் தொகுதியில் பல்வேறு விழாக்களில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ கஜேந்திரன், பாப்பாரப்பட்டி கோயில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ரமேஷ் அழைக்கப்படாதது குறித்து ரமேஷின் தாயார் நியாயம் கேட்டு வாக்குவாதம் செய்தது அங்கு சலசலப்பை ஏற்படுத்த, கஜேந்திரனுடன் வந்தவர்கள் அவரைத் தள்ளி விட்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர் ஒருவர் பெங்களூருவில் இருந்த ரமேஷிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதுதான், ‘அந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டுதான் நான் இப்போ விஷமருந்தி சாகப்போகிறேன்’ என்று ரமேஷ் கூற, ‘இது தவறான முடிவு, கட்சி பிரச்னைக்காக குடும்பத்தைத் தவிக்க விட்டு தற்கொலை செய்ய நினைக்கக் கூடாது’ என்று அந்தச் செய்தியாளர் அட்வைஸ் செய்ததாகச் சொல்லப்படுகிறது.
அப்போது அருகில் இருந்த ரமேஷ் மனைவிக்கு இந்த விஷயம் தெரிந்து தற்கொலை செய்ய முயன்றவரைத் தடுத்துள்ளார். அதற்கு முன்பே, தற்கொலை செய்யப்போவதாகவும், அதற்கு காரணம் இவர்கள்தான் என்று சிலரின் பெயரைக் குறிப்பிட்டு கட்சி வாட்ஸ் ஆப் குழுவில் அவர் ஆடியோ பகிர்ந்துவிட்டார், தற்போது அதுதான் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது” என்றனர்.

இதுகுறித்து ரமேஷிடம் பேசியபோது, “தளபதி விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்தாரு, நான் பெங்களூருவில் மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு பாப்பாரப்பட்டியிலேயே இருந்து கட்சிக்காக உழைத்தேன், லட்சக்கணக்கில் பணத்தை இழந்திருக்கிறேன்.
இயக்கமாக இருந்த காலத்தில் பாப்பாரப்பட்டி பேரூராட்சித் தேர்தலில் குறைந்த வாக்குகளில் வெற்றியை இழந்தேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சீட் கேட்டிருந்தாலும் கஜேந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்ததைப்பற்றி கவலைப்படாமல் தீவிரமாக வேலை செய்து அதிக வாக்குகள் பெற்று கொடுத்தேன்.
ஆனால், வெற்றி பெற்ற பிறகு, கட்சிக்குச் சம்பந்தமில்லாத தங்கராஜ், சிவா, மணி என்று அருகில் வைத்துக்கொண்டு அவர்கள் சொல்படி செயல்படுகிறார்.
அவர்கள்தான் நகரச்செயலாளரான எனக்கு எந்த நிகழ்ச்சி குறித்தும் தெரிவிப்பதில்லை. தொடர்ந்து எம்.எல்.ஏ-வின் புறக்கணிப்பு பற்றி மற்றவர்கள் கேட்கும்போது எனக்கு அவமானமாக இருக்கும். இந்நிலையில்தான் பொதுச்செயலாளர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை என்னிடம் தெரிவிக்காமலே ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள்.
இதனால் ஊரில் இருக்கப் பிடிக்காமல் பெங்களூரூ சென்றுவிட்டேன். இதையெல்லாம் பார்த்து ஆதங்கப்பட்ட என் அம்மா கஜேந்திரன் வந்தபோது கேட்டதற்குத்தான் தள்ளிவிட்டுள்ளனர், அதைக் கேள்விப்பட்டு தற்கொலை செய்யத் தயாரானேன்.
அந்த நேரம் ரிப்போர்ட்டர் ஒருவர் பேச, அதன் மூலம் என் மனைவிக்குத் தெரிந்து தடுத்துவிட்டார். இப்பவும் சொல்கிறேன் என்னுடைய இந்த முடிவிற்கு எம்.எல்.ஏ-வுடன் உள்ள சிவா, தங்கராஜ், மணி ஆகியோர்தான் காரணம். இவ்வளவு நடந்தும் இதுவரை எம்.எல்.ஏ ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை” என்றார்.

இதுகுறித்து பென்னாகரம் எம்.எல்.ஏ கஜேந்திரனிடம் கேட்டபோது, “பென்னாகரத்தில் வெற்றி பெற்றதிலிருந்து என் மீது ஏதாவது குற்றம் சுமத்தி கெட்ட பெயரை உண்டாக்க சிலர் முயற்சித்து வருகிறார்கள், அதில் இதுவும் ஒன்று.
பாப்பாரப்பட்டி நகரச்செயலாளர் ரமேஷ் தேர்தலின்போதும் எந்த வேலையும் செய்யவில்லை, வெற்றி பெற்ற பிறகு நன்றி சொல்லும் கூட்டங்களுக்கு அழைத்தும் வரவில்லை.
இப்படி ஆர்வமில்லாமல் அவர் ஒதுங்கியிருக்கும் நிலையில் கட்சியினர் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்வதையும் குறை சொல்கிறார். அவர் அம்மா யாரென்றெல்லாம் எனக்கு தெரியாது, அவரை யாரும் தள்ளிவிடவில்லை. என் மீது கெட்ட பெயரை உண்டாக்க இதுபோன்று பழிகளைப் போடுகிறார்.
கட்சி நிர்வாகிகள்தான் என்னுடன் உள்ளார்கள், வேறு யாரும் அல்ல. எல்லாவற்றையும் தலைமைக்குத் தெரிவித்துள்ளேன். நான் வெற்றி பெற்றது பிடிக்காமல்தான் இப்படி செய்கிறார்களா என்று தெரியவில்லை” என்றார்.

‘மாவட்டச் செயலாளர் தன்னைப் புறக்கணித்து அரசு விழாவை நடத்துகிறார்’ என்று சில நாட்களுக்கு முன் புகார் எழுப்பிய எம்.எல்.ஏ கஜேந்திரன் மீது, அதே புகாரை கட்சி நிர்வாகி எழுப்பி தற்கொலை வரைக்கும் சென்றுள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தின் மூலம் தருமபுரி மாவட்ட தவெக உட்கட்சி பிரச்சனையால் தகிக்கிறது.