மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டு மூத்த மகளின் திருமணச் செலவிற்காக பிரேமா சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த கலையரசியிடம் 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. அந்தக் கடனுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டி கேட்டு தொடர்ந்து நெருக்கடி கொடுத்துள்ளார்.
இதையடுத்து கடந்த ஜூலை 13-ஆம் தேதி புது மண்டபம் அருகே பிரேமாவை வரவழைத்து, தகாத வார்த்தைகளால் திட்டி, வட்டி தொகையை உடனடியாகத் தராவிட்டால் ஆடையைக் கலைந்துவிட்டுவிடுவேன், உயிருடன் விடமாட்டோம் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான பிரேமா, வீட்டில் மூட்டைப்பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் பிரேமாவின் உயிரிழப்புக்குக் காரணமானவர்களை அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அரசு இராஜாஜி மருத்துவமனை சாலையில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைய செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து பிரேமாவின் கணவர் ராஜாராம் அளித்த புகாரின் அடிப்படையில், திருப்பதி, கலையரசி, பகவதி மற்றும் அங்கம்மாள் ஆகிய 4 பேர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு மற்றும் கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விளக்குத்தூண் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து பேசிய பிரேமாவின் கணவர் மற்றும் உறவினர்கள், 2 லட்சம் கடனுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டி கேட்டு டார்ச்சர் பண்ணியுள்ளனர். கலையரசி, திருப்பதியிடம் 4% வட்டிக்கு வாங்கி அதனை 20% வட்டி எனக் கூறி பிரேமாவிற்கு வழங்கி தினசரி சம்பளத்தைப் பெற்றுள்ளார். நாங்க கஷ்டப்பட்டு உழைச்ச காசெல்லாம் வட்டில போச்சு 4 நாளா வட்டிகட்டாததுனால ஆபாசமாகப் பேசி சேலையை உருவிருவேன் என மிரட்டியதால் விஷம் குடிச்சு செத்துட்டாங்க.

மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி மீட்டர் வட்டி கொடுக்குறாங்க. அதனால அங்குள்ள தொழிலாளர்களும் மீட்டர் வட்டிக்கு வாங்கி நாள்தோறும் சொல்ல முடியாத துயரத்தில் இருக்கிறாங்க.
கந்து வெட்டி கேட்டு கலையரசி, திருப்பதி உள்ளிட்டோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் பிரேமா வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட தனது சம்பளத்தை எல்லாம் கொடுத்துவிட்டு சாப்பிடாமல் கூட குடும்பத்தோடு பசியோடு இருந்தோம். வட்டிக்கு மேல வட்டி கேட்டதுனால பிரேமா விஷ அருந்தி உயிரிழந்து விட்டார்.
இப்போது வாடகை கூட கட்ட முடியாமல் குடும்பமே தவித்து நிற்கிறோம். உணவுக்குக் கூட வழி இல்லை. அரசு எங்களது குடும்பத்தினர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மனைவியின் தற்கொலைக்குக் காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம்” எனத் தெரிவித்தார்.