கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில்.
“இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்கம் செய்யச் சொல்லி என்னை கோயில் நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினார்கள்.
இதை நான் செய்யவில்லை என்றால், என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள்.

பல பெண்களை பள்ளி சீருடையிலேயே புதைத்து இருக்கிறேன். பெண்களின் உடலில் பாலியல் வன்முறைக்கான காயங்களும், சில நேரம் ஆசிட் தழும்புகளும் காணப்படும்” என்று, இந்தக் கோயிலின் முன்னாள் தூய்மைப் பணியாளர் சின்னையா புகார் ஒன்றை அளித்தார்.
இது 2025-ம் ஆண்டு மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்கு.
இதே சின்னையா நேற்று கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் இன்னொரு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் தர்மஸ்தலா கோயிலின் பெயரைக் கெடுக்க தன்னைப் பயன்படுத்தி கொண்டனர் என்று தெரிவித்துள்ளார் சின்னையா.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது…
“அனைவருக்கும் வணக்கம். ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக என்னைப்பற்றிய சில செய்திகள் விவாதிக்கப்பட்டு வருவது என் கவனத்திற்கு வந்துள்ளது.
இது மிகவும் உணர்வுபூர்வமான விஷயம் என்பதாலும், லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையோடு விளையாடும் ஒரு விஷயம் என்பதாலும், எழும் சந்தேகங்களுக்குப் பதிலளிக்க வேண்டியது என் கடமையாகும்.

நான் தற்போது சற்று தூரத்தில் இருக்கிறேன். இன்னும் இரண்டு நாள்களில் நானே நேரில் வந்து, ஊடக நண்பர்கள் வாயிலாக இதற்குப் பதிலளிக்கிறேன்.
அதுவரை காற்றில் பரவும் வெற்று வதந்திகளையும், சில சமூக விரோதிகள் இந்தச் செய்திக்கு இறக்கை முளைக்க வைக்கப் பார்ப்பதையும் தயவுசெய்து யாரும் நம்ப வேண்டாம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.