`மேட்டூர் அணை வரலாற்றில் ஏற்பட்டுள்ள 62-வது ஆண்டு காலதாமதம் இது!' – அதிகாரிகள் சொல்வதென்ன?

Spread the love

காவிரி ஆற்றுப்படுகை பாசனத்தின் அடிப்படை ஆதாரமாகப் பங்காற்றி வருகிறது மேட்டூர் அணை. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரால் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு மேல் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் செழிக்கும். குறுவை நெல் சாகுபடிக்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.

வறட்சியில் மேட்டூர் அணை

அதேவேளையில் பருவமழை தாமதம், அணையின் நீர்மட்டம், நீர் வரத்து போன்ற காரணிகளே தண்ணீர் திறப்புக்கான தேதியைத் தீர்மானிக்கும். அணையின் நீர்மட்டம் 90 அடியாக உயரும் பட்சத்தில் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும். நடப்பு ஆண்டு ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அணையின் நீர்மட்டம் 79 அடியில் சரிந்து கிடக்கிறது. இதன் காரணமாகவே ஜூன் 12 – ம் தேதியான இன்று மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து தெரிவித்த அதிகாரிகள், “ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி அணை திறக்கப்பட்டு, ஜனவரி 28-ம் தேதி மூடப்படும். இந்தக் காலகட்டத்தில் 330 டி.எம்.சி தண்ணீரைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெறும். கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததாலும் நீர்வரத்து குறைந்துள்ளதாலும் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வறட்சியில் மேட்டூர் அணை

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட 1934-ம் ஆண்டு தொடங்கி உரிய தேதியான ஜூன் 12-ம் தேதியன்று 20 முறை அணை திறக்கப்பட்டுள்ளது. உரிய தேதிக்கு முன்பே 11 முறை திறக்கப்பட்டுள்ளது. போதிய நீர் இருப்பு இல்லாததால் நடப்பாண்டுடன் சேர்த்து 62-வது ஆண்டாக காலதாமதமாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *