நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வைத் தடை செய்யக் கோரியும் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக கடந்த ஜூலை 23-ம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்று பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், ”தவெக அமைச்சரவையில் இருக்கும் பட்டியலின அமைச்சர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. இன்று வரை ஏன் எந்தத் தலித் பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்க மறுக்கிறார்கள்? அமைச்சர் ராஜ்மோகன் எழும்பூரில் நின்றபோதுதான் அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது எங்களுக்குத் தெரிந்தது.
ஒரு பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்துகொண்டு ஊடகவியலாளராக இருந்துகொண்டு இதுவரை ஒரு தலித் பிரச்னைக்குக் கூட குரல் கொடுத்ததில்லை அவர்” என ஆவேசமாகப் பேசியிருந்தார்.
இந்நிலையில் நேற்று ( ஜூலை. 25) புதுச்சேரியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்மோகனிடம் பா.ரஞ்சித் பேசியது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “பதிலுக்குப் பதில் சொன்னால் நன்றாக இருக்காது. நமக்குள் சண்டைப் போட்டுக் கொண்டால் கூட்டத்தின் நோக்கம் சிதைந்து போய்விடும். அவர் நடத்தியது நீட்டிற்கு எதிரான கூட்டம்தான். ரஞ்சித் அவர்களின் நம்பிக்கை வெல்லும்படி வேலை செய்துக்காட்டுவதுதான் இதற்கான பதில்” என்று கூறியிருக்கிறார்.