தவெக ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள், விசிக கட்சிகளின் ஆதரவை தவெக தலைவர் விஜய் கோரியிருந்தார். நீண்ட விவாதங்களுக்குப் பிறகே மூன்று கட்சிகளும் தங்கள் ஆதரவை வெளியிலிருந்து தெரிவிப்பதாக அறிவித்தன.
இந்த நிலையில், திரைமறைவில் விசிக பேரம் பேசியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுகுறித்து விளக்கமளிக்கும் வகையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான ஆதரவை வழங்கினோம்.
இதற்கு பின்னணியில் திமுக இருப்பதாக வதந்திகள் பரவின. நாங்கள் தி.மு.க கூட்டணியில் அங்கமாக இருந்துதான் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பல்வேறு போராட்டக் களங்களில் பயணித்திருக்கிறோம். எனவே, ஒருவேளை திமுக ஒரு முன்மொழிவை வைத்தாலும், அதை எங்களால் புறந்தள்ளிவிட முடியாது.
அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. அமைச்சரவையில் இடம்பெற்றால், அது திமுக கூட்டணியை விட்டு முற்றாக வெளியேறுவதாகக் கருதப்படும். இது ஒரு கொள்கை ரீதியான முடிவு என்பதால், விவாதிப்பதற்கு எங்களுக்குக் கால அவகாசம் தேவைப்பட்டது.