நடந்து முடிந்த தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவி இருக்கிறது. குறிப்பாக ஸ்டார் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை வீழ்த்தி த.வெ.க வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி வாகையை சூடியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.

இந்நிலையில், “தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், அச்சம், கூச்சம் எதுவும் இல்லாமல் தலைவர் முன்பு வந்து முகத்தைக் காட்டி நிற்கிறார்?” என்று திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் சேகர் பாபுவை சாடியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “எனக்கு இரவு முழுவதும் உறக்கமில்லை இந்த முகமே என் கண்களை மூடினாலும் வந்துகொண்டே இருக்கிறது. அப்பழுக்கற்ற அரசியல் தலைவர்! யாருக்கும் தீங்கு நினைக்காத தலைவர்!
குழந்தை உள்ளம் கொண்ட தலைவர்! தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயற்கை. இவை இரண்டின் உச்சத்தையும் பார்த்த இயக்கம் திமுக. ஆனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவரின் தொகுதியை கவனிக்கத்தவறியவர் மீது தயவு தாட்சன்யம் இன்றி தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்தால் தான் உண்மை திமுக தொண்டன் நிம்மதியாய் இருப்பான்.

தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், அச்சம், கூச்சம் எதுவும் இல்லாமல் தலைவர் முன்பு வந்து முகத்தைக்காட்டி நிற்கிறார்? நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா சேகர் பாபு? ” என்று கடுமையாகச் சாடியிருக்கிறார்.