தவெகவின் முதல் பட்ஜெட் தாக்கல்……மகளிருக்கான உரிமைத் தொகை இடம்பெறுமா? – Kumudam

Spread the love

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டசபை கூட்டத்தில், 2026–27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். புதிய அரசின் முதல் பட்ஜெட் என்பதால் அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடையிலும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பட்ஜெட்டை தயாரிக்கும் பணியில் கடந்த சில வாரங்களாக முதலமைச்சர் விஜய் அனைத்து துறை அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் குறித்து விரிவான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. மாநிலத்தின் நிதி நிலையை கருத்தில் கொண்டு மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

குறிப்பாக, “வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டம்” என்ற புதிய சிறப்புத் திட்டம் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம், ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்றும், பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணிக்கும் வாய்ப்பும் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்த பிறகு, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று, கூட்டத்தொடரின் நாட்கள் குறித்து முடிவு எடுக்கப்படும். தொடர்ந்து நாளை தமிழக சட்டசபையில் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *