தவெகவுக்கு குறி….அண்ணாமலை போடும் மாஸ்டர் பிளான் என்ன? – Kumudam

Spread the love

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, ‘வீ தி லீடர்ஸ்’ என்ற அமைப்பை நடத்தி வருகின்ற நிலையில், இதன் மூலம் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல், கல்லூரிகள் தோறும் மாணவர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

அண்மையில், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பின்னர், அதனை அரசியல் கட்சியாக மாற்றுவோம் என அண்ணாமலை பேசியிருந்தார். தற்போது வரை அந்த அமைப்பில் 20 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமே இணைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்தகட்டமாக ‘மிஸ்டு கால்’ மூலம் உறுப்பினர்களைச் சேர்க்கும் நடவடிக்கையை அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார்.

தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவர்களிடம் பேசி உறுப்பினர்களாக இணைப்பதற்காக பிரத்யேக குழு ஒன்றையும் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான தொலைபேசி எண்ணை அடுத்த கூட்டத்தில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை கட்டமைப்பு ரீதியாக வலுப்படுத்தும் பணிகளிலும் அண்ணாமலை தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. விரைவில் மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிடவும் அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகிகளின் பெயர்கள் வெளியிடப்பட்ட பின்னர், உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், தவெக தொடர்பான முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை கண்காணிப்பதற்காக அண்ணாமலை ஒரு குழுவை உருவாக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தக் குழு கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஜனவரி மாதத்துக்குப் பிறகு ஆதாரங்களுடன் தவெகவை அண்ணாமலை கடுமையாக விமர்சிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதுவரை தவெகவை அண்ணாமலை கடுமையாக விமர்சிக்காத நிலையில், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அவரது அதிரடி பிரஸ்மீட்டுக்கான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தற்போதைய சூழலில், அமைப்பை அமைதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் வலுப்படுத்துவதிலேயே அண்ணாமலையின் கவனம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இடைத்தேர்தலில் போட்டியிடும் திட்டம் எதுவும் இல்லை என அண்ணாமலை ஏற்கனவே வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார். இதனால், அடுத்தகட்டமாக நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அண்ணாமலையின் அரசியல் கணக்கு என்னவாக இருக்கும் என்பதே அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.

இந்த தனிப்படைக் குழுவின் மூலம் தவெக தொடர்பான குற்றச்சாட்டுகளைச் சேகரித்து, அவற்றை கூடிய விரைவில் ஆதாரங்களுடன் நிரூபிக்க அண்ணாமலை தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது அண்ணாமலையின் அரசியல் இலக்கு தவெகவை நோக்கியே இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *