சென்னை சைதாப்பேட்டையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் ஒதுக்கீட்டில் சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி, த.வெ.க எம்.எல்.ஏ அருள் பிரகாசம் மீது கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீடுகள் ஒதுக்கப்படும்போது வழக்கமாக குலுக்கல் முறையில் வீடுகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த நடைமுறையில் முறைகேடு செய்யப்பட்டு, ஒரு குறிப்பிட்ட பிளாக்கில் பட்டியலின மக்களுக்குத் தனியாக வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து தவெக எம்.எல்.ஏ அருள் பிரகாசம் மீது வழக்கறிஞர் விக்னேஷ் என்பவர் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முன்னாள் அமைச்சர் தடுத்து நிறுத்தியிருந்த சாதி அடிப்படையிலான ஒதுக்கீட்டை தற்போதைய எம்.எல்.ஏ தரப்பினர் மீறியுள்ளனர். “ஏ’ பிளாக்கில் பட்டியலினத்தவர் யாருடைய எண்ணும் சேர்க்கப்படாமல், ‘சி’ பிளாக்கில் சுமார் 36 வீடுகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் சாதிய அடிப்படையில் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவினை மற்றும் முறைகேடு குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்ததற்காக, எம்.எல்.ஏ அருள் பிரகாசத்தின் ஆதரவாளர்கள் என் மீது தாக்குதல் நடத்தி, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்கள்.” என பகிரங்கமாக குற்றம்சாட்டிருந்தார்.