நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை உறுதி செய்வதில், அந்தக் கட்சிக்குச் சிக்கல் நீடித்தது.
அதையடுத்து திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஐ.யூ.எம்.எல் உள்ளிட்டவை, தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தன. இதில் காங்கிரஸ், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் கட்சிகள் அமைச்சர் பதவிகளைப் பெற்று ஆட்சியிலும் பங்கெடுத்திருக்கின்றன.

கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆரம்பம் முதலே, `நாங்கள் தவெக ஆட்சியமைக்க மட்டுமே ஆதரவு தெரிவித்திருக்கிறோமே தவிர… ஆட்சிக்கு ஆதரவு இல்லை’ எனக் குறிப்பிட்டு வருகின்றன.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, “தவெக ஆட்சி அமைக்க நாம் ஆதரவுக் கடிதம் அளித்ததைத் தொடர்ந்து, தவெக தலைவர் ஜோசப் விஜய் நமக்கு அமைச்சரவையில் இடமளிக்க முன்வந்தார்.

எனினும், அந்தப் பதவி வாய்ப்பை மறுத்து, கொள்கைக்காக வெளியிலிருந்து மட்டுமே ஆதரவளிக்கும் முடிவை இடதுசாரிக் கட்சிகள் எடுத்தன. மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகளின் நலன்கள் மற்றும் மதச்சார்பின்மை விழுமியங்களை தவெக அரசு பாதுகாக்கும் வரை ஆதரிப்போம். மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கி போராடுவோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.