தவெக எதிர்ப்பு: “இதைக் கடந்த ஆட்சியில் செய்திருக்கணும்"- விமர்சனங்களுக்கு அமைச்சர் ராஜ் மோகன் பதில்

Spread the love

தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தில் இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது விவாதமானது. அதுதவிர, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் ஆளுநர் உரையில் திமுக அரசின் சாதனைகள்தான் இருக்கின்றன எனவும், இந்த உரையில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்து குறிப்பிடவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் ஆளுநர் உரைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

ராஜ் மோகன்
ராஜ் மோகன்

அப்போது, “ சட்டமன்ற உறுப்பினர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியை முடித்துவிட்டு புதிய பொலிவோடும், புத்துணர்ச்சியோடும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் கலந்து கொண்டனர். இளைஞர்களும், இளம் பெண்களும் அதிக அளவில் பங்கெடுத்துள்ள இந்தச் சட்டமன்றமானது, சமூகவாரியாகப் பிரதிநிதித்துவம் சமமாக வழங்கப்பட்டு, ஒரு ‘சமூக நீதிமன்றமாய்’ மாறியிருக்கிறது. ஒன்றிய அரசின் சுற்றறிக்கையில் ‘வந்தே மாதரம்’ போன்ற தேசியப் பாடல் பாடப்பட வேண்டும் என்று இருந்தபோதிலும், தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை ‘தமிழ்த்தாய் வாழ்த்து’க்கே முதலிடம், முதன்மைத் தகுதி என்பதுதான் எங்களின் கொள்கை நிலைப்பாடு. தமிழ்த்தாய் வாழ்த்தோடுதான் சட்டமன்றம் தொடங்கியது. தேசிய கீதத்தை அவமதிக்கும் நோக்கம் எதுவும் இல்லை. இறுதியிலும் தேசிய கீதம் முறைப்படி இசைக்கப்பட்டது.

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் தங்களின் எதிர்ப்பைக் காட்டுவதற்கும், எதிர்வினையாற்றுவதற்கும் முழு உரிமை உண்டு. அதுவே ஜனநாயகத்தின் அழகு. எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள் பேட்ஜ் அணிந்து வந்து காண்பித்த இந்த எதிர்ப்பைக் கடந்த ஆட்சியிலேயே காட்டியிருக்க வேண்டும். சற்றுக் காலதாமதமாக இந்த ஆட்சியில் காட்டுகிறார்கள். தற்போதைய அரசு பொது அமைதியையும், சட்டம்-ஒழுங்கையும், நீதியையும் நிலைநாட்டுவதற்காக ‘சிங்கப் பெண்கள் சிறப்பு படை’ முதற்கொண்டு பல்வேறு அதிரடி வேலைகளை முன்னெடுத்து வருகிறது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

கடந்த 2024-ம் ஆண்டை விட தற்போது குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. காவல் நிலையங்களில் மக்களுக்கு, குறிப்பாகப் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு உணர்வும், நம்பிக்கையும் அதிகரித்துள்ளதால், தற்போது பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக வெளியே வந்து புகார் அளிக்கத் தொடங்கியுள்ளனர். குற்றம் நடக்கும் பட்சத்தில், எந்தவிதப் பாரபட்சமும் இன்றி துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு அதிகபட்சத் தண்டனை பெற்றுத் தருவதற்கான வேலைகளை இந்த அரசு செய்து வருகிறது.

சமூக நீதியை நிலைநாட்டுவதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசும், சமூக நீதி அடிப்படையிலான கணக்காய்வை மாநில அரசும் நடத்த வேண்டும். இதன் மூலமே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களில் யாருக்குப் பலன்கள் போய்ச் சேர்ந்துள்ளன, முதல் தலைமுறை பட்டதாரிகள் யார், பெண்கள் எந்த அளவிற்குப் படித்துள்ளனர் போன்ற விபரங்களை வேர் மட்டத்திலிருந்து துல்லியமாக அறிய முடியும். இதற்காகத் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.

விஜய் / அமைச்சரவை
விஜய் / அமைச்சரவை

நாங்கள் பின்பற்றக்கூடிய ஒரே தலைவர் முதல்வர் விஜய் மட்டும்தான். மக்களை முன்னிலைப்படுத்தி மட்டுமே இந்த அரசு செயல்படும். மேலும், தங்களின் கொள்கைத் தலைவர்களாகப் பகுத்தறிவுத் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் மற்றும் கர்மவீரர் காமராசர் ஆகியோரைப் பின்பற்றி இந்த அரசு வீறுநடை போடுகிறது.

கடைசியாக, கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்த Live Telecast முதல்வர் விஜய்-யின் வாக்குறுதியின்படி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இது வெளிப்படையான, தூய்மையான மற்றும் சிறந்த ஆளுமைக்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *