Tamilnadu
oi-Shyamsundar I
சென்னை: தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் குதிரை பேர வழக்கில் அமலாக்கத்துறை தரப்பும் விசாரணையை தொடங்கி உள்ளது. ஏற்கனவே தமிழக அரசு விசாரணைக்கு இடையே இதில் ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் உள்ளதால் அமலாக்கத்துறை தரப்பும் விசாரணையை தொடங்கி உள்ளது.
தவெக எம்.எல்.ஏ இளையராஜாவை விலைக்கு வாங்க முயன்ற வழக்கில், தி.மு.க முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆர்.வி. அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு தவெக தரப்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படும் வேளையில், தற்போதைய புதிய திருப்பமாக இவ்வழக்கில் அமலாக்கத்துறை (ED) நேரடியாகக் களமிறங்கியுள்ளது.
ஹவாலா நெட்வொர்க்: தாமாக முன்வந்த அமலாக்கத்துறை
தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் ஹவாலா பணம் கைமாறியிருப்பதாகக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், இந்த வழக்கை அமலாக்கத்துறை தாமாக முன்வந்து தனது கைகளில் எடுத்துள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணையின் போது கணக்கில் காட்டப்படாத 50 லட்ச ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்தத் தொகை எங்கிருந்து வந்தது, இதன் பின்னணியில் உள்ள சர்வதேச ஹவாலா நெட்வொர்க் என்ன என்பது குறித்தும், கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆவணங்கள் குறித்தும் அமலாக்கத்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது செந்தில் பாலாஜி தரப்புக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் பிளான் செய்த விஜய்
தமிழக முதல்வர் விஜய் கடந்த வாரம் கரூர் மாவட்டத்திற்கு சென்றார். ஆனால், விஜய் கரூர் மண்ணில் கால் வைப்பதற்கு முன்பாகவே, இந்த 35 கோடி ரூபாய் லஞ்சப் புகாரில் செந்தில் பாலாஜியை அதிரடியாகக் கைது செய்ய வேண்டும் என்பதே தவெக தலைமை மற்றும் முதல்வர் விஜய்யின் திட்டமாக இருந்தது.
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வர முயன்றது மற்றும் தவெக அரசை கலைக்க சதித் திட்டம் தீட்டியது ஆகிய கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த கைது நடவடிக்கையை அரங்கேற்ற காய் நகர்த்தப்பட்டது. ஆனால், அதற்குள்ளாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீன் தீர்ப்பு, விஜய்யின் ஒட்டுமொத்த வியூகத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டது. இதனால் திட்டமிட்டபடி கைதை அரங்கேற்ற முடியாமல் போனதால் விஜய் தரப்பு பெரும் ஏமாற்றமடைந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த வழக்கில் அமலாக்கத்துறை களமிறங்கி உள்ளது.
நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதங்கள்
மன்னதாக் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யான் மிகக் கடுமையான வாதங்களை முன்வைத்தார். “இது சாதாரண வழக்கல்ல, ஆட்சியை நிலைகுலைய வைக்க ஹவாலா பணத்தைப் பயன்படுத்தி 10 தவெக எம்எல்ஏக்களை தூக்க நடந்த சதி. இதில் முக்கிய குற்றவாளி சிங்கப்பூருக்கு தப்பியோடிவிட்டான். எம்எல்ஏவுக்கு 35 கோடியும், இடைத்தரகருக்கு 5 கோடியும் பேசப்பட்டுள்ளது. எனவே இவர்களுக்கு முன்ஜாமீன் தரக்கூடாது,” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
இருப்பினும், செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “தொலைபேசி அழைப்பு வந்ததாகக் கூறப்படும் நாளுக்கும், புகார் அளிக்கப்பட்டதற்கும் இடையே 2 நாட்கள் காலதாமதம் உள்ளது. மேலும், எவ்வித ஆடியோ பதிவும் இல்லை; வெறும் மொபைல் அழைப்பு விவரங்கள் மட்டுமே உள்ளன. கரூர் இடைத்தேர்தல் மற்றும் அரசியல் பழிவாங்கலுக்காகவே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது,” என வாதிட்டார்.
எஃப்.ஐ.ஆரில் செந்தில்பாலாஜியின் நேரடித் தொடர்பு குறித்துப் போதிய ஆரம்பகட்ட ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.