Sports
oi-Yogeshwaran Moorthi
அட்லாண்டா: ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி தோல்வி அடைய வேண்டும் என்று உலகம் முழுவதும் எதிர்ப்புக் குரல் அதிகரித்துள்ளது. அதற்கு அர்ஜென்டினா அணியின் தொடர் வெற்றியும், லியோனல் மெஸ்ஸியின் அதீத நாயக பிம்பமும் காரணமாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக விரிவாக காணலாம்.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றுப் போட்டிகள் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் வலிமை வாய்ந்த பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணியும், நாளைய போட்டியில் அர்ஜென்டிடா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணி தோல்வி அடைய வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் பேசத் தொடங்கி இருக்கின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளாக கால்பந்து விளையாட்டின் தூதுவனாக லியோனல் மெஸ்ஸி இருந்தார். ஆனால் அப்படியான லியோனல் மெஸ்ஸிக்கு எதிராகவே ரசிகர்கள் நிற்பது கால்பந்து உலகையே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. பார்சிலோனா அணிக்காக தொடர்ந்து ஏராளமானோ கோப்பையையும், சாதனைகளையும் மெஸ்ஸி படைத்தார். ஆனால் உலகக்கோப்பை வெல்ல முடியவில்லை என்று மெஸ்ஸியை கிண்டல் செய்தனர்.
இதன்பின் மெஸ்ஸி ஓய்வை அறிவித்த போது, உலகமே அவரை கம்பேக் கொடுக்க கண்ணீர் வடித்தது. இதன்பின் வந்த மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக கோபா அமெரிக்கா, உலகக்கோப்பை என்று அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று சாதனைக்கு மேல் சாதனை படைத்தார். ஒரு காலத்தில் கால்பந்து விளையாட்டின் சோக நாயகனாகவும், அதிர்ஷ்டமில்லாத வீரராக பார்க்கப்பட்ட மெஸ்ஸி, இன்று அப்படியே வெற்றிக்கான அடையாளமாக இருக்கிறார்.
விளையாட்டை பொறுத்தவரை வெல்ல முடியாதவர்கள் வெல்லும் போது உலகமே ஒன்றுகூடி பாராட்டும். 2022 வரை அர்ஜென்டினா அணி அப்படிதான் இருந்தது. ஆனால் இப்போது அர்ஜென்டினாவின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த உலகமும் மெஸ்ஸிக்கு எதிராக நிற்கிறது.
இதன் காரணமாகவே எகிப்து அணிக்கு எதிராக நடுவர்கள் செய்த சிறிய தவறும் அர்ஜென்டினா செய்ததாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனால் உலகையே எதிர்த்து அர்ஜென்டினா அணியாலும், மெஸ்ஸியாலும் உலகக்கோப்பையை வெல்ல முடியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கு நாளைய இரவு வரை காத்திருக்க வேண்டும்.