Tamilnadu
oi-Vignesh Selvaraj
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி, அலுவலகப் பொருட்களை சேதப்படுத்தியதாக தவெக நிர்வாகி பாலமுருகன் மற்றும் அவரது அண்ணன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே கல்குவாரிக்கு சென்று பணம் கேட்டு தவெக நிர்வாகி பாலமுருகன், அரிவாளால் தாக்க முயற்சித்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் மேற்கு தவெக ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வருபவர் பாலமுருகன். இவரும் இவரது அண்ணன் முண்டன் என்ற முண்டசாமி ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு சென்று கல்குவாரி உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
பணம் கொடுக்காத ஆத்திரத்தில் கல்குவாரி அறையில் இருந்த கம்யூட்டர், டிவி, மோட்டார் பைக் உள்ளிட்ட பொருட்களை பாலமுருகன் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கல்குவாரி உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், பாலமுருகன் மற்றும் அவரது சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கல்குவாரி தரப்பில், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, பாலமுருகன் மற்றும் முண்டசாமி ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாலமுருகன் மற்றும் முண்டசாமி ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஒன்றிய செயலாளர் பாலமுருகன், கல் குவாரியில் பணம் கேட்டு மிரட்டும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.