
சட்டசபை தேர்தலில், த.வெ.க., தனித்து போட்டி யிட்டு, 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க, தி.மு.க., கூட்டணியில் இருந்த, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன.
இந்நிலையில், ஆட்சி அமைந்த பின், த.வெ.க., கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம், முதல் முறையாக, வரும் 1ம் தேதி, சென்னை அடுத்த கோவளத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடக்க உள்ளது. இதையொட்டி, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர், நேற்று முன்தினம் வி.சி.க., தலைவர் திருமாவளவனை சந்தித்து, அழைப்பு விடுத்தனர்.
ஊழல் இல்லாத ஆட்சியை நடத்த வேண்டும் என முதல்வர் விஜய் நினைக்கிறார். ஆனால் கூட்டணியில் இருக்கும் சில கட்சி நிர்வாகிகள் அட்ராசிட்டியில் ஈடுபடுவதாக முதல்வர் விஜய்க்கு உளவுதுறை மூலம் தகவல் கிடைத்துள்ளது. அரசு டெண்டர், காவல்நிலையம் என பல விஷயங்களில் கூட்டணி கட்சி என்ற பெயரில் அழுத்தம் கொடுக்கப்படுவதாக உளவுத்துறை முதல்வருக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சில அறிவுறுத்தல்களை கூட்டணி கட்சி கொடுக்க விஜய் விரும்புகிறாராம்.
அதுமட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புக்களை கலைத்துவிட்டு, உடனடியாக தேர்தலை நடத்த விஜய் விரும்புகிறார். இதில் கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு தொடர்பாகவும் நாளை நடைபெற இருக்கும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.