இந்நிலையில், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தவெக உதவுவதை டெல்லி மேலிடம் ரசிக்காது என்கிற யதார்த்தத்தையும் தவெகவின் முக்கியஸ்தர்கள் உணர்ந்திருக்கின்றனர். ஆனால், இன்னமும் காங்கிரஸ் தரப்பில் ஒரு டீம் தவெகவுடன் இதுசம்பந்தமாக பேசிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில்தான் கட்சிக்காக உழைத்தவர்கள் யாரையாவது நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கலாம் எனும் முடிவுக்கு வந்திருக்கின்றனர். அதன்படி லயோலா மணி அல்லது கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் சம்பத் குமார் ஆகிய இருவரில் ஒருவரை டிக் அடிக்கலாம் எனும் மனநிலையில் முதல்வருக்கு நெருக்கமான வட்டத்தினர் இருப்பதாக கூறப்படுகிறது.

இருவருமே பட்டியலினத்தை சேர்ந்தவர்கள். லயோலா மணி ஆதி திராவிடர் சமூகத்தையும் சம்பத் குமார் தேவேந்திர குல வேளாளர் சமூகத்த்தையும் சேர்ந்தவர். அமைச்சரவையில் உள்ள 8 தலித்துகளில் 7 பேர் ஆதிதிராவிடர்களாக இருப்பதால் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த சம்பத் குமாரின் பெயர் இறுதியாக டிக் அடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அமைச்சரவையிலும் 8 பட்டியலினத்தவர்களுக்கு இடம் கொடுத்துவிட்டு, ராஜ்ய சபா சீட்டையும் பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கே கொடுத்தால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடுமோ எனும் தயக்கமும் விஜய்யின் வியூக வகுப்பு குழுவிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் விஜய்க்கு நெருக்கமான வட்டத்திலிருந்தே முக்கியமான ஒருவரை இறக்கலாமா எனும் பேச்சுவார்த்தையும் ஓடிக்கொண்டிருக்கிறது. எம்.பி சீட் இல்லையென்றாலும் சம்பத் குமாரை தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக நியமிக்கவும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
விஜய் என்ன முடிவெடுக்கப் போகிறார்?