எப்படி ஒருவரால் தன்னை இந்த அளவுக்கு கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஒரு தியான நிலை போன்று. வாடிக்கையாளர் என்றால் ஒரே மாதிரியான குரல் நயம் தான். அவர்கள் எப்படி பேசினாலும் நான் இப்படித்தான் பேசுவேன் என்று.
இன்னொருவர்..
சில வாடிக்கையாளரிடம் பேசும் பொழுது முதலில் அதட்டுவார். அதட்டலில் கூட ஒரு நல்ல தொனி. அப்புறம் பொறுமையாகப் பேசுவார். சிலரை நம் பேச்சைச் கேட்க வைக்க முதலில் அதட்ட வேண்டியது அவசியமாகத் தான் இருக்கிறது என்பதையும் அவரைப் பார்த்து நான் கற்றுக் கொண்டுள்ளேன்.
அபப்டியா ஏன் அதட்ட வேண்டும் அன்பாலயே புரிய வைக்க முடியாதா என்ன?
இல்லை முடியாது தான்.
வரிசையாக வாருங்கள் என்றால் அனைவருக்கும் அவசரம். சிலருக்கு காத்திருக்க பொறுமையே இருப்பதில்லை.
இன்னும் சிலரோ நாம் என்ன சொன்னாலும் அதிலிருந்து மீண்டும் கேள்வி கேட்கும் வாடிக்கையாளர்கள்.
“செக் புக் எப்போ வரும்?”
“ஒரு வாரத்துல வீட்டுக்கு கொரியர் வரும்”
“ஒரு வாரம் ஆகுமா.. கொஞ்சம் அவசரமா இப்போவே வேணும். ஒரே ஒரு செக் மட்டும் இப்போ குடுக்க முடியுமா?”
எப்படி முடியும். காசோலை பொறுத்த வரை வங்கிக் கிளைகளில் விண்ணப்பிக்கத் தான் முடியும். தலைமையகத்தில் இருந்து அச்சு ஆகி வீட்டு முகவரிக்குத் தான் காசோலை அனுப்பி வைக்கப்படும்.
கையில் கிடைக்குமா என்றால் கிடைக்காது. உடனே கிடைக்குமா என்றால் கிடைக்காது. ஒரு வாரம் ஆகத் தான் செய்யும். இதைத் தெளிவாக கொஞ்சம் வலுவான குரலில் வாடிக்கையாளரிடம் சொல்லித்தான் ஆகவேண்டும்.
ஒரே நாளில் அந்த வேலையை செய்து முடிக்கவும் முடியாது. பொய்யான நம்பிக்கையை வாடிக்கையாளருக்கு கொடுக்கவும் கூடாது. துணிச்சலாக விஷயத்தை சொல்லிவிட வேண்டும்.
இந்தத் துணிச்சலை அவரிடம் கண்டு வியந்தேன்.
இன்னொரு புதுமையானவரைப் பற்றி சொல்ல வேண்டுமே…
“என்ன வேலை இது.. எனக்குப் பிடிக்கலை” என்பார் தான் வேலை செய்யும் இடத்தை திட்டுவார். ஆனால் வாடிக்கையாளரிடம் மட்டும் அன்பாகத் தான் பேசுவார்.
“எனக்கு இந்த வேலை பிடிக்கும் என் வேலைய நினைச்சு எனக்கு திருப்தியா இருக்கு. ஆனால் கஸ்டமர் கிட்ட பேசும்போது பொறுமைய இழந்தட்றேன். ஏன் இவ்ளோ கேள்வி கேக்கறாங்கன்னு நினைக்கிறேன். ஆனால் நீங்க எப்படி வேலையே பிடிக்கலைன்னு சொல்றிங்க.. ஆனால் கஸ்டமர் கிட்ட சூப்பரா பேசுறீங்க.. அவங்களும் பேங்க் வந்தாலே உங்கள தான் கேக்கறாங்க.. எப்படி?”
“எனக்கு இந்த வேலை பிடிக்காது.. வேலையை நினைச்சு திருப்தியும் இல்லை.. ஆனால் மத்த மனுசங்கள பிடிக்கும்.. அவங்க இடத்துல என்னை வெச்சி தான் அவங்களுக்கு பதில் சொல்வேன்.. என் முன்னாடி பதட்டமாவோ சோகமாவோ நிக்குறாங்கன்னா எனக்கு அத எப்படியாவது சரிப்பண்ணனும்னு தோணும்.. அதுக்காக நான் முயற்சி பண்வேன். இதுல ஒரு சுயநலம் கூட இருக்கலாம்”
“சுயநலமா?”
“ஆமா அவங்களுக்கு வேண்டியது கிடைக்கும் போது அவங்க நம்மள பாத்து ஒரு பார்வை சந்தோசமா பாப்பாங்களே அதுக்காக வேலை செய்றேன்”
அவர் சொல்லும்பொழுதே எனக்கு என்னவோ போல் இருந்தது. எனக்கும் அப்படி ஒரு பூரிப்பை அனுபவிக்க ஆசை ததும்பியது. அனுபவிக்க வாய்ப்பு கிடைக்குமா!
இன்னும் பலவிதமான அதிகாரிகளின் வேலை செய்யும் முறையைக் கவனித்தேன். மேல் கூறிய மூவரின் பணியாற்றும் நடை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்களின் சிந்தனையும் தாக்கமும் எனக்குள் இருந்தது. அவர்களின் சாயலில் வெளிப்பட விரும்பினேன்.
பணியில் சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டன. இன்னும் முழுதாய் வாடிக்கையாளர்களைக் கிரகிக்க முடியவில்லை. இன்னும் மனிதர்களை நான் கவனிக்க வேண்டுமோ!
“மேடம் காபி போடவா?” ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த நான் தனம் அக்கா கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்தேன்.
“கொண்டு வாங்கக்கா”
காபி குடிக்கும் பழக்கம் பெரிதாக இல்லை. வேலைக்குச் சேர்ந்தப் பின் ஏற்படுத்திக் கொண்ட ஆசை. காபியை மாலை வேளையில் குடிக்கும் பொழுது காலையில் இருந்து பெரிதாய் ஏதோ சாதித்தத் திருப்தியோடு ஆசுவாசமாக குடிப்பேன்.
காபி போடுவதற்காக தனம் அக்கா பாலைக் கொதிக்க வைக்கும் பொழுதே எனக்குக் காபியின் மணம் தான் வீசும்.
காபி போட்டதும் அதே சூட்டில் அருந்தினால் தான் எனக்கு குடித்தது போல் இருக்கும். காபியை என் மேஜையில் வைத்ததும் எடுத்துக் குடிக்கத் தொடங்குவேன்.
முடிந்த வரை அந்த இரண்டு நிமிடத்திற்கு எந்த வேலையும் செய்ய மாட்டேன்.
காபியின் சுவை மட்டும் மூளைக்கு எட்டிய நிமிடத்தில்
“அள்ளி சிந்தும் அழகின் துளிகள்
உயிரில் பட்டு உருளும்…
வசமில்லா மொழியில் இதயம்
எதையோ உளறும்…’