"தவெக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணிக்கு எந்தப் பங்கமும் வராது" – விஜய் வசந்த் எம்பி நம்பிக்கை

Spread the love

தமிழ்நாடு காங்கிரஸ் சமூக ஊடகத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறுகையில், “சமூக ஊடகங்களின் முக்கியத்துவம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அது நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தற்போதைய புதிய தலைமுறையினர் வீதியில் இறங்கிப் போராடுவதைவிட, வீட்டுக்குள் இருந்தபடியே செல்போன் மூலமாகவே வெளிப்படையாகத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்கிறார்கள்.

ஒரு பொதுக்கூட்டம் நடத்தினால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களையே சென்றடைய முடியும். ஆனால் சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு பல லட்சக்கணக்கான மக்களை எளிதில் சென்றடைகிறது. அதனால்தான் காங்கிரஸ் கமிட்டியும் சமூக ஊடகப் பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதே சமயம் சமூக வலைத்தளங்களில் எந்தக் கட்சியினர் அவதூறு பரப்பினாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம்.

நேர்மையான, ஆரோக்கியமான அரசியலைத்தான் எனது தந்தை கற்றுக்கொடுத்தார். தனிநபர் தாக்குதல், உடலமைப்பு ரீதியான விமர்சனம் செய்வதையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதே நேரத்தில், எங்கள் கட்சித் தொண்டர்களும் பிறரைத் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

காங்கிரஸ் சமூக ஊடகத்துறை மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விஜய் வசந்த் எம்.பி
காங்கிரஸ் சமூக ஊடகத்துறை மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விஜய் வசந்த் எம்.பி

இடைத் தேர்தல்களில் த.வெ.க வென்று தனிப்பெரும்பான்மை நோக்கி நகர்ந்தால் காங்கிரஸைக் கழற்றிவிட்டுவிடும் என அரசியல் விமர்சகர்கள் கூறுவது முற்றிலும் தவறான கருத்து. தேர்தலுக்கு முன்பே கூட்டணியில் பங்கேற்கும் வாய்ப்பை த.வெ.க ஏற்படுத்தியிருந்தது.

தேர்தலுக்குப் பின் த.வெ.க ஆட்சி அமைப்பதற்குத் துணையாக இருந்தது காங்கிரஸ். த.வெ.க-விற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில்தான் காங்கிரஸ் செயல்படுமே தவிர, கூட்டணிக்கு எந்தப் பங்கமும் வராது. இடைத்தேர்தலில் காங்கிரஸ் முழு முனைப்புடன் களப்பணியாற்றி வெற்றியை ஈட்டித்தரும். ​புதிய தலைமைச் செயலகம் கட்டாயம் தேவை.

எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நவீன தொழில்நுட்பங்கள், வசதிகளுடன், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எந்தவித இடையூறும் இல்லாத ஒரு பொருத்தமான இடத்தில் புதிய தலைமைச் செயலகத்தை அரசு அமைப்பது அவசியமானது.

காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த்
காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த்

தமிழ்நட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகமே இல்லை. கர்நாடகா போன்ற மாநிலங்களில் எம்.பி-க்களுக்கு வாகனங்கள், அதற்கான படிகள் வழங்கப்படுகின்றன. எங்களுக்குக் குறைந்தபட்சம் அலுவலகமாவது கட்டாயம் ஏற்படுத்தித் தர வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வருகிறோம்.​ என் தந்தை வசந்தகுமார் இன்று இருந்திருந்தால் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகிக்கும் இந்தச் சூழலைப் பார்த்து அளவற்ற மகிழ்ச்சியடைந்திருப்பார்.

‘காங்கிரஸில் இருப்பதே பெருமை; அதை வளர்ப்பதே கடமை’ என்று வாழ்ந்தவர் அவர். பல வாய்ப்புகள் கிடைக்காமல் தட்டிக்கழிந்தபோதும் கட்சிக்காகவே உழைத்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக வேண்டும் என்பது அப்பாவின் கனவாக இருந்தது. காமராஜர் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்ய வேண்டும், காங்கிரஸை வளர்க்க வேண்டும் என்பது அவருடைய பெருங்கனவாக இருந்தது. அதனை நிறைவேற்றுவதே எங்கள் நோக்கம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *