காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பின்போது, “ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளாராக ஏற்காதவர்களுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும்?” என்கிற ரீதியில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளரும், எம்.பி-யுமான பிரவீன் சக்ரவர்த்தி, “தவெக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருக்கிறது. அதில் எந்தக் குழப்பமும் இல்லை. கூட்டணி குறித்து பேசுவதற்கு செல்வப்பெருந்தகை யார்?” எனக் விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக செல்வப்பெருந்தகை தன் எக்ஸ் பக்கத்தில், “கூட்டணி பற்றி பேச செல்வப்பெருந்தகை யார் எனக் கேட்கிறார் அறிவு ஜீவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர். வடமாநிலத்தில் எங்கள் தலைவர் சென்ற பின் அவர் இருந்த மேடையை தண்ணீர் உற்றி கழுவிய அழுக்கேறிய மதவாத மேட்டுக்குடி மனநிலையின் நீட்சியே இது.
மாண்புமிகு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத எவரோடும் கூட்டணி எதற்கு என்பதே என் கேள்வி? அதற்கு நீண்ட நேரம் முதல்வர் சிரித்துப் பேசினார் என்கிறார் அந்த அறிவு ஜீவி.
உங்களுடன் நீண்ட நேரம் சிரித்து பேசுவதுதான் கூட்டணியில் தொடருவதற்கான ஒப்பந்தமா? சரி முதல்வராவது ஒரே ஒரு முறை ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் போதுமே. பிரச்னை தீர்ந்ததே. முதல்வர்கூட சொல்ல வேண்டாம் அந்தக் கட்சியில் உள்ள முன்னனிப் பொறுப்பில் உள்ளோர் யாராவது சொல்லட்டுமே, அது கூட வேண்டாம், நீண்ட நேரம் உங்களிடம் சிரித்துப் பேசிய முதல்வரிடம் நம் அணியின் பிரதமர் வேட்பாளர் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் என்று நீங்கள் அழுத்தமாகச் சொல்லி அதை அவரும் ஏற்றுக்கொண்டு உங்களிடமாவது உத்தரவாதம் தந்தாரா? தந்திருந்தால் அதையாவது சொல்லுங்களேன்.

பிரதமர் மோடி குறித்தோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தோ, பாஜக குறித்தோ சட்டப்பேரவையில் விமர்சித்தால் அது சட்டப்பேரவைக் குறிப்பில் இருந்து வேகமாக நீக்கப்படுகிறதே அது ஏன் என்று அடுத்த முறை சிரித்துப் பேசும்போது முதல்வரிடம் கேட்டுச் சொல்லுங்கள்.
உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது. உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம். பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தைத் தீர்மானிப்பதில்லை; அவர் இயக்கத்திற்காகச் செய்த உழைப்பும் அர்ப்பணிப்புமே அதைத் தீர்மானிக்கும். காலம் பலரை முன்னிறுத்தும்; அதே காலம் பலரை மறந்தும் போகும்.
ஆனால் ஒரு பேரியக்கத்திற்காக நேர்மையாக உழைத்தவர்களின் பங்களிப்பை வரலாறு பதிவு செய்யும். காங்கிரஸ் பேரியக்கம் தனிநபர்களைவிடப் பெரியது. பதவிகளைவிட அதன் கொள்கை பெரியது. தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர்தான் பிரதமர் வேட்பாளர் என்போர் பக்கம் நின்று கொண்டு என் தலைவர் திரு ராகுல் காந்திதான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர் என்னை யார் என்று கேட்கிறார்.
உரக்கச் சொல்கிறேன். நான் திரு. ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தொண்டன். சுயமரியாதையுடன் இந்த மண்ணின் மைந்தன், பூர்வகுடி” எனக் காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார்.